வழிபாடு

பெண்கள் புது தாலி மாற்றி வழிபட உகந்த நாள்

Published On 2026-03-05 14:11 IST   |   Update On 2026-03-05 14:11:00 IST
  • கணப் பொருத்தம் சரியாக இருந்தால் தான் தம்பதிகளுக்குள் ஒற்றுமை ஏற்பட்டு, இல்லற வாழ்க்கை சிறப்பாக அமையும்.
  • விநாயகர் மிக எளிமையான தெய்வம் என்பதனால் அவரை உடலை வருத்தி, கடுமையான விரதம் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.

மாசி மாதத்தில், சக்தி சிவத்தோடு ஐக்கிய மாவதால் இந்த மாதத்தில் மங்களகரமான விஷயத்தை செய்யலாம். சிவனும், சக்தியும் இணைந்து முழுமை பெறுவதால், தன்னுடைய கணவனின் நலனுக்காக பெண்கள் இந்த மாசி மாதத்தில் தாலிக் கயிற்றினை புதிதாக மாற்றிக் கொள்வது நடைமுறையாக உள்ளது. அதனால்தான், இதனை மாங்கல்ய மாதம் என்றும் சொல்வார்கள்.

அகிலத்திற்கே தாயாக விளங்கும் பார்வதி தேவியே மகன் விநாயருக்கான சதுர்த்தி விரதம் இருந்து தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டார் என புராணங்கள் சொல்கின்றன. விநாயகருக்கு கணபதி என்றொரு திருநாமம் உண்டு. இதற்கு கணங்களின் அதிபதி என்று பொருள்.

ஜோதிட சாஸ்திரப்படி 27 நட்சத்திரங்களையும் 3 விதமான கணங்களாக பிரித்து, அதன் அடிப்படையிலேயே திருமண பொருத்தம் பார்க்கப்படுகிறது. இதற்கு கணப்பொருத்தம் என்பார்கள். இந்த கணப் பொருத்தம் சரியாக இருந்தால் தான் தம்பதிகளுக்குள் ஒற்றுமை ஏற்பட்டு, இல்லற வாழ்க்கை சிறப்பாக அமையும்.

அதனால் தான் திருமணத்தில் தடை உள்ளவர்கள், திருமண வாழ்க்கையில் பிரச்சனை இருப்பவர்கள், கணவன்-மனைவி ஒற்றுமை, பெண்கள் தீர்க்க சுமங்கலியாக வாழ்வதற்கு கணபதியை வழிபட்டால் அவர் திருமண வாழ்க்கையில் உள்ள தடைகள், பிரச்சனைகள் அனைத்தையும் விலக்கி இனிமையான வாழ்க்கையை வரமாக அருள்வார். திருமணமான பெண்கள் மாசி மாதத்தில் வரும் சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதம் இருந்து வழிபட்டால் தீர்க்க சுமங்கலி வரம் பெறலாம். மாசி சங்கடஹர சதுர்த்தியான நாளை மாலை 4.30 மணி முதல் 5.30 மணிக்குள் பெண்கள் தாலி சரடினை மாற்றிக் கொண்டு விநாயகரை வழிபட்டால், இல்லற வாழ்க்கையில் இருக்கும் துன்பங்கள் அனைத்தும் விலகி, தீர்க்க சுமங்கலியாக வாழ விநாயகர் அருள் செய்வார்.

மாசிக்கயிறு பாசி படியும் என்னும் பழமொழிக்கு ஏற்ப மாசி மாதத்தில் வரும் சங்கடஹர சதுர்த்தியன்று மாலை நேரத்தில் தாலியில் உள்ள மஞ்சள் கயிற்றை மாற்றினால் சுமங்கலியாக வாழும் பாக்கியம் உண்டாகும்.

விநாயகர் மிக எளிமையான தெய்வம் என்பதனால் அவரை உடலை வருத்தி, கடுமையான விரதம் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. சர்க்கரை, அவல் மட்டும் கூட படைத்து அருகம்புல் வைத்து வழிபட்டாலே மனம் குளிர்ந்து, நாம் வேண்டும் வரங்களை அளிக்கக் கூடியவர் விநாயகப் பெருமான்.

Tags:    

Similar News