தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் தொகுதி எண்ணிக்கை குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு- துரை வைகோ

Published On 2025-07-11 13:29 IST   |   Update On 2025-07-11 13:29:00 IST
  • மல்லை சத்யா மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கட்சியின் தலைமை தான் முடிவு எடுக்கும்.
  • வைகோ கோபப்படுவதால் அவர் இழந்தது தான் அதிகம். கோபப்பட்டாலும் அவர் நல்ல மனிதர்.

கே.கே.நகர்:

ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ எம்.பி. திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டின் தவிர்க்க முடியாத அரசியல் சக்தி யாக ம.தி.மு.க. விளங்குகிறது என்பதை எடுத்துரைக்கும் வகையில் செப்டம்பரில் அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு திருச்சியில் நடைபெற உள்ளது.

அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தது தவறானது என்பதை வைகோ வெளிப்படையாக கூறி உள்ளார். அதற்காக அ.தி.மு.க. தீண்டகூடாத கட்சி அல்ல. எம்.ஜி.ஆரையோ ஜெயலலிதாவையோ அவர் இழிவுபடுத்தி எதுவும் கருத்து கூறவில்லை.

மல்லை சத்யா மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கட்சியின் தலைமை தான் முடிவு எடுக்கும்.

ம.தி.மு.க. வின் தொண்டர்களையோ நிர்வாகிகளையோ தி.மு.க.வில் சேர்க்கவில்லை.

ம.தி.மு.க.வில் இன்னும் சிலர் ஒதுங்கி இருக்கிறார்கள். தலைமைக்கு துரோகம் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வேறு சில இயக்கங்களில் இணையலாம். அது அவர்களின் உரிமை.

கட்சிக்கு துரோகம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து தலைவர் தான் முடிவு எடுப்பார்.

ம.தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டத்தில் காலி நாற்காலிகளை படம் எடுத்த பத்திரிக்கையாளர்களை அடிக்க வேண்டும் என வைகோ கூறவில்லை.

வைகோ கோபப்படுவதால் அவர் இழந்தது தான் அதிகம். கோபப்பட்டாலும் அவர் நல்ல மனிதர்.

பொடா சட்டம் வந்த பொழுது வைகோ அதை ஏற்றுக்கொள்ள கூடாது என பாராளுமன்றத்தில் பேசினார். பொடாவில் பத்திரிக்கை துறையினரையும் கைது செய்யலாம் என இருந்தது அதை மட்டுமாவது நீக்க வேண்டும் என பேசியவர் வைகோ.

கூட்டணியில் 12 இடங்கள் வேண்டும் என ம.தி.மு.க. எங்கும் கேட்கவில்லை, எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து கூட்டணி தலைமையுடன் பேசி தேர்தல் நேரத்தில் தலைவர் முடிவெடுப்பார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News