நம்பி ஓட்டு போட்ட மக்களுக்கு கமல் துரோகம் செய்துவிட்டார்- வானதி சீனிவாசன்
- மாநாடு முருக பக்தர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் மாநாடாக- மனவேதனைக்கு தீர்வு தரும் மாநாடாக அமையும்.
- சினிமா ஷூட்டிங்கில் காமிரா முன்பு வந்து பேசிவிட்டு பின்னர் மறந்து விடுவது போல நிஜவாழ்க்கையிலும் நடந்து வருகிறார்.
கோவை தெற்கு சட்டசபை தொகுதியில் இன்று நலம் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
பின்னர், முருக பக்தர்கள் மாநாடு தொடர்பாக, அவர் கோவையில் வீடு- வீடாக சென்று பொதுமக்களிடம் நோட்டீஸ்களை வழங்கினார்.
தொடர்ந்து வானதி சீனிவாசன் நிருபர்களிடம் பேசியதாவது:-
மதுரையில் வருகிற 22ம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. தொடர்ந்து, தமிழகத்தில் முருகன் கோவில்கள் உள்ள இடங்களில் வசிக்கும் பொதுமக்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்து வருகிறோம். இந்த மாநாடு முருக பக்தர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் மாநாடாக- மனவேதனைக்கு தீர்வு தரும் மாநாடாக அமையும்.
நடிகர் கமலஹாசன் 2 தேர்தல்களில் போட்டியிட்டார். அப்போது அவரை நம்பி வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்துவிட்டார். மேலும், மேல்சபை எம்.பி. பதவிக்காக தி.மு.க. கூட்டணிக்கு சென்று உள்ளார்.
சினிமா ஷூட்டிங்கில் காமிரா முன்பு வந்து பேசிவிட்டு பின்னர் மறந்து விடுவது போல நிஜவாழ்க்கையிலும் நடந்து வருகிறார். எப்படியாவது பாராளுமன்றம் செல்ல வேண்டும் என்ற சுயநலத்துடன், தன்னை நம்பிய வாக்காளர்களுக்கு துரோகம் செய்து உள்ளார்.
பொதுமக்களின் ஆதரவை பெற்று வெற்றி பெற முடியாமல், தி.மு.க.வின் பின்னால் ஒளிந்துகொண்டு இந்த பதவியை பெற்று உள்ளார்.
மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், அவரது அண்ணன் அழகிரியும் சந்தித்து பேசியது குறித்து சொல்வதற்கு ஒன்றும் இல்லை. அண்ணன்- தம்பிகள் பிரிவது சேருவது இயல்பு.
அதே நேரத்தில் மதுரையில் முதலமைச்சர் பார்வையிட சென்றபோது அங்கு குவிந்து கிடந்த குப்பைகளை துணி போட்டு மூடி வைத்திருந்த சம்பவம் தவறானது.
கோவையிலும் பல இடங்களிலும் உள்ள குப்பைகளை இதுபோன்று தான் மறைத்து வைத்து வருகிறார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.