தி.மு.க.விற்கு போட்டியே கிடையாது- அமித் ஷா பேச்சுக்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலடி
- தி.மு.க. ஆட்சியை வேரோடு பிடுங்கி எறிவோம் என்று பேசியிருக்கிறார்கள்.
- அமித்ஷாவின் அருகிலேயே அமர்ந்திருந்த எடப்பாடி பழனிசாமியும் வாய் திறந்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
அமைச்சர் கே.என். நேரு இன்று நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
பா.ஜ.க.வினர், நயினார் நாகேந்திரனை தலைவராக போட்டு ஒரு கூட்டத்தை கூட்டியுள்ளனர். அந்த கூட்டத்தில், தி.மு.க. ஆட்சியை வேரோடு பிடுங்கி எறிவோம் என்று பேசியிருக்கிறார்கள். அது அவர்களுடைய ஆசை. அந்த ஆசையை அவர்கள் சொல்லி வருகிறார்கள்.
விவசாயத்தில், வேரோடு பிடுங்கி நடவு செய்தால் அந்த பயிர் இன்னும் பெரியதாக, செழிப்பாக வளரும். அதுபோல அவர்கள் பிடுங்க நினைத்தால் எங்கள் ஆட்சி இன்னும் சிறப்பாகத்தான் இருக்கும்.
கடந்த 15 வருடங்களாக இந்த வேரோடு பிடுங்கும் வேலையைத்தான் பா.ஜ.க. பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அவர்களால் தமிழகத்தில் எதையும் செய்ய முடியவில்லை. தி.மு.க. கூட்டணிதான் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. வருங்காலத்திலும் தி.மு.க.தான் மாபெரும் வெற்றி பெறும்.
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது. தமிழகத்திற்கு கடந்த காலங்களில் 3 முறை வந்த அமித்ஷா, ஒவ்வொரு முறையும் 'கூட்டணி ஆட்சி' என்றே பேசி வருகிறார். ஆனால், அதுகுறித்து அவரும் விளக்கம் சொல்லவில்லை. அமித்ஷாவின் அருகிலேயே அமர்ந்திருந்த எடப்பாடி பழனிசாமியும் வாய் திறந்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது இருண்ட ஆட்சி அவர்களது கண்ணுக்கு தெரியவில்லை. அமித்ஷா பேசிய இதே ஊரில் மிகப்பெரிய வெற்றியை பெறுவோம். அவர்கள் நினைப்பது நடக்காது. உண்மையில், அ.தி.மு.க.வின் அடிமட்ட தொண்டர்கள் பானக கூட்டணியை ஏற்றுக்கொள்ளவில்லை. அதேபோல், பா.ஜக வினரும் அ.தி.மு.க. கூட்டணியை விரும்பவில்லை.
இப்படிப்பட்ட சூழ்நிலையை வைத்துக்கொண்டு, நாங்கள் ஜெயித்துவிடுவோம், ஆட்சியை பிடித்துவிடுவோம் என்று அவர்கள் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. அவர்கள் நினைப்பது ஒருபோதும் நடக்காது.
முதலமைச்சரை யார் எந்த பெயரை வைத்து அழைத்தாலும், மீண்டும் அவர்தான் தமிழகத்தின் முதலமைச்சராக வருவார். பொதுமக்கள், குறிப்பாக மகளிர் மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மிகப்பெரிய ஆதரவு அலை வீசி வருகிறது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு இருந்த மகளிர் ஆதரவை எல்லாம் தாண்டி, இப்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு ஆதரவு பெருகி வருகிறது.
நடைபெறவிருக்கும் தேர்தலில் தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெற்று, மீண்டும் தி.மு.க. ஆட்சி அமையும். எங்கள் தலைவர் மு.க. ஸ்டாலின் மீண்டும் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்பார்.
தோற்றுப் போய் விடுவோம் என்ற பயத்தில் தான், பீகார், ஆந்திரா போன்ற மாநிலங்களில் பா.ஜ.க.வினர் பல்வேறு பிரச்சினைகளை செய்து வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை, தி.மு.க.விற்கு போட்டியே கிடையாது. எதிரணியில் யார் நின்றாலும், நாங்கள் தான் மகத்தான வெற்றி பெறுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.