தமிழ்நாடு செய்திகள்

கள்ளச்சாராய வழக்கு: சிபிஐ விசாரணைக்கு எதிராக திமுக அரசு மேல்முறையீடு- இபிஎஸ் கண்டனம்

Published On 2024-12-05 14:49 IST   |   Update On 2024-12-05 14:49:00 IST
  • சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும் என்று அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் வழக்கு தொடர்ந்தனர்.
  • வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் கள்ளச்சாராயம் அருந்தி 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பான வழக்கு சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும் என்று அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வௌியிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் சிபிஐ விசாரணைக்கு எதிராக மு.க.ஸ்டாலினி-ன் திமுக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பது கண்டனத்திற்குரியது.

கள்ளச்சாராய வழக்கின் விசாரணையை காலம் தாழ்த்தி, முடக்க நினைத்தே இந்த மேல்முறையீட்டை திமுக அரசு தாக்கல் செய்துள்ளது.

சிபிஐ இந்த வழக்கை விசாரிப்பதில் திமுக அரசுக்கு என்ன பயம்?

கள்ளச்சாராய மரணங்களுக்கு திரு. ஸ்டாலினின் நிர்வாகத் திறனற்ற அரசின் அலட்சியப் போக்கே காரணமாக இருக்க, அவரது கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை இதனை விசாரிப்பது எப்படி ஏற்புடையதாக இருக்கும்?

உச்சநீதிமன்றத்தில் உரிய சட்டப் போராட்டத்தை நடத்தி, மரணித்த 67 உயிர்களுக்கான நீதியை நிலைநாட்ட அதிமுக தொடர்ந்து போராடும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News