கரூரில் 41 பேர் உயிரிழப்புக்கு காரணமானவர் யார்?- விரைவில் சி.பி.ஐ. அறிக்கை: திண்டுக்கல் சீனிவாசன்
- ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.4 லட்சத்து 66 ஆயிரம் கடன் உள்ளது.
- அ.தி.மு.க.வுக்கு துரோகம் செய்தவர்கள் கரைவேட்டியை கூட கட்ட முடியாமல் போய்விட்டனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மேற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் நடந்தது. இதற்கு ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் பாரதிமுருகன் தலைமை தாங்கினார். இதில் அ.தி.மு.க. பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசியதாவது:-
தி.மு.க. அரசு அனைத்து வரிகளையும் உயர்த்தியது. அதேபோல் விலைவாசியும் கடுமையாக உயர்ந்துவிட்டன. இதன்மூலம் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை கூடுதல் செலவு ஏற்படுகிறது. அதை மறைக்க தி.மு.க. அரசு ரூ.1,000 வழங்குகிறது. அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் மக்களின் சுமையை குறைக்க ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10,000 வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இதனால் தமிழக மக்களிடம் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு பெருகிறது. அதை சகித்து கொள்ள முடியாமல் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி குறித்து தி.மு.க. அவதூறு பரப்புகிறது. அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி மூழ்கும் கப்பல் என்று கூறுகின்றனர். அ.தி.மு.க. நீர்மூழ்கி கப்பலாக இருந்து தமிழக மக்களை பாதுகாப்பாற்றும். தி.மு.க. ஆட்சியால் தமிழகத்தின் கடன்சுமை ரூ.10 லட்சம் கோடியாக உயர்ந்துவிட்டது. ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.4 லட்சத்து 66 ஆயிரம் கடன் உள்ளது.
கரூரில் 41 பேர் உயிரிழப்புக்கு காரணமானவர் யார்? என்று சி.பி.ஐ. அறிக்கை வெளியாக இருக்கிறது. ஆனால் விஜய் செய்த தவறால் உயிரிழப்பு ஏற்பட்டதாக கூறுகின்றனர். ஆனால் கரூர் சம்பவத்தில் தன் ரசிகர்கள் இறந்ததற்கு பொறுப்பேற்காமல் நான் தான் காரணமா? என விஜய் கேட்கிறார்.
அரசியல் கட்சிகள் நடத்தும் ரோட்ஷோக்களை முறைப்படுத்தும் அரசின் நெறிமுறைகளால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டு இருக்கிறது. நான் கூறிய பிறகு தான் வேலூரில் நடைபெற்ற த.வெ.க. கூட்டத்தில் கூடாரம் அமைத்து விஜய் பேசியுள்ளார்.
அ.தி.மு.க.வுக்கு துரோகம் செய்தவர்கள் கரைவேட்டியை கூட கட்ட முடியாமல் போய்விட்டனர். தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நல்லாட்சி அமையும் என்று பேசினார்.