தமிழ்நாடு செய்திகள்

பழமை மாறாமல் 5 கி.மீ தூரம் மாட்டு வண்டியில் ஊர்வலமாக வீட்டிற்கு சென்ற மணமக்கள்

Published On 2025-09-12 09:58 IST   |   Update On 2025-09-12 09:58:00 IST
  • ஒரு சில கிராமங்களில் தங்கள் பாரம்பரியத்தை மறக்காமல் மாட்டு வண்டிகளை பயன்படுத்தி வருகின்றனர்.
  • திருமணமான புதுமண தம்பதியினர் ஒன்றாக மாட்டு வண்டியில் பயணம் செய்ததை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து ஆச்சரியம் அடைந்தனர்.

பொள்ளாச்சி:

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் 35 ஆண்டுகளுக்கு முன்பு வரை மாட்டு வண்டிகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வந்தன.

பொருட்கள் ஏற்றி செல்வது, எங்காவது ஊருக்கு செல்வது என எல்லா பணிகளுக்கும் மாட்டு வண்டிகளே பயன்படுத்தப்பட்டு வந்தது.

இதுமட்டுமின்றி அந்த காலத்தில் திருமணம் முடிந்தவுடன், மணமக்கள் மாட்டு வண்டிகளில் பயணம் செய்து ஊர்வலமாக தங்களது வீட்டிற்கு செல்வர். இப்படி அனைத்து பயன்பாட்டிலும் மாட்டு வண்டிகள் முக்கியத்துவம் பெற்று இருந்தது.

ஆனால் காலப்போக்கில் அவை எல்லாம் மறைந்து வருகிறது. இருப்பினும் இப்போது ஒரு சில கிராமங்களில் தங்கள் பாரம்பரியத்தை மறக்காமல் மாட்டு வண்டிகளை பயன்படுத்தி வருகின்றனர்.

அத்துடன் காளை மாடுகள் குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் ஒரு சில இளைஞர்கள் தங்கள் திருமணத்தின் போது பழமையை மறக்காமல் மாட்டு வண்டியில் பயணம் செய்வதை இப்போதும் விரும்புகிறார்கள்.

இந்த நிலையில் பொள்ளாச்சியை சேர்ந்த வாலிபர் தனது திருமணம் முடிந்தவுடன் புது மனைவியுடன் மாட்டு வண்டியில் அமர வைத்து தனது வீட்டிற்கு கூட்டி சென்றுள்ளார்.

பொள்ளாச்சி அருகே உள்ள அர்த்தநாரிபாளையத்தை சேர்ந்தவர் சிவப்பிரகாஷ். இவருக்கும், கோவையை சேர்ந்த காவியா என்பவருக்கும் நேற்று பொள்ளாச்சி அடுத்த கரட்டு மடத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்தவுடன் மணமகன், தனது புதுமனைவியை தனது பூர்வீக வீடான அர்த்தநாரிபாளையத்திற்கு மாட்டு வண்டியிலேயே பயணம் மேற்கொள்ள முடிவு செய்தார்.

அதன்படி திருமணமான கையோடு, தனது மனைவி காவியாவை மாட்டு வண்டியிலேயே அமர வைத்து கூட்டி சென்றார். கரட்டு மடத்தில் இருந்து அர்த்தநாரிபாளையம் வரையிலும் 5 கி.மீட்டர் தூரத்துக்கு மணமகனே மாட்டு வண்டியை ஓட்டி சென்றார். திருமணமான புதுமண தம்பதியினர் ஒன்றாக மாட்டு வண்டியில் பயணம் செய்ததை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து ஆச்சரியம் அடைந்தனர்.

Tags:    

Similar News