அரசு திட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயருக்கு தடை: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு
- முதலமைச்சரின் புகைப்படம் இடம்பெற அனுமதித்த சென்னை உயர்நீதிமன்றம் அவரது பெயரை பயன்படுத்த தடை விதித்தது.
- நாளை மறுநாள் (புதன்கிழமை) இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
தமிழக அரசு தொடங்கி உள்ள புதிய திட்டங்கள் மற்றும் அமலில் உள்ள பழைய திட்டங்கள் தொடர்பான விளம்பரங்களில் முதலமைச்சரின் புகைப்படம் இடம்பெற அனுமதித்த சென்னை உயர்நீதிமன்றம் அவரது பெயரை பயன்படுத்த தடை விதித்தது.
இந்த விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க. தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, அரசு தொடங்கும் திட்டங்களில், முன்னாள் முதலமைச்சர் படத்தையோ, ஆளுங்கட்சியின் கொள்கை சித்தாந்த தலைவர்களின் புகைப்படங்களையோ பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டது.
இந்த நிலையில் ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் இன்று தமிழக அரசு மேல் முறையீடு செய்தது.
மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் மற்றும் முகுல் ரோத்தஹி வழக்கை தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வு ஏற்றுக் கொண்டது.
நாளை மறுநாள் (புதன்கிழமை) இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.