எம்.என்.ராஜம்- எஸ்.பி.முத்துராமனுக்கு கலைத்துறை வித்தகர் விருது வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- 2024-ம் ஆண்டிற்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதினை வழங்கி சிறப்பித்தார்.
- எஸ்.பி.முத்துராமன் தமிழ்த் திரைப்படத் துறையின் மூத்த இயக்குநர்களில் ஒருவர் ஆவார்.
தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகைகளில் ஒருவரான நடிகை எம்.என். ராஜம், சிறு வயதிலேயே நாடகங்களில் நடிக்கத் தொடங்கி, 1949-ல் குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் அறிமுகமானவர். 1950 மற்றும் 1960 களில் முன்னணி நாயகியாக விளங்கினார்.
ரத்தக் கண்ணீர், பெண்ணின் பெருமை, புதையல், தங்கப்பதுமை, நாடோடி மன்னன், பாசமலர், தாலி பாக்கியம், மங்கையர் திலகம் போன்ற பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்து ரசிகர்களின் அன்பைப் பெற்றார். 200க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்து மக்கள் மனங்களில் நீங்கா இடம் பிடித்தவர்.
இத்தகைய பெருமைக்குரிய பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றைய தினம் 2024-ம் ஆண்டிற்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதினை வழங்கி சிறப்பித்தார்.
எஸ்.பி.முத்துராமன் தமிழ்த் திரைப்படத் துறையின் மூத்த இயக்குநர்களில் ஒருவர் ஆவார். 1960-ல் களத்தூர் கண்ணம்மா படத்தில் உதவி இயக்குநராக தனது திரைத்துறை பணியை தொடங்கி, பின்னர் 1970 முதல் 1990-ம் ஆண்டு வரை தமிழ் சினிமாவில் மிகவும் வெற்றிகரமான இயக்குநராக உயர்ந்தார்.
இவர் 70-க்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்களை இயக்கியுள்ளார். தமிழ் சினிமாவின் பல வெற்றிகரமான திரைப்படங்களை இயக்கி மிக முக்கிய இயக்குநர்களில் ஒருவராக வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.
திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் திரைப்படத்துறைக்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பை பாராட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றைய தினம் அவருக்கு 2025-ம் ஆண்டிற்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதினை வழங்கி சிறப்பித்தார்.
விருது பெற்ற பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம் மற்றும் திரைப்பட இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் ஆகியோருக்கு விருதுடன் ரொக்கப் பரிசாக தலா 10 லட்சம் ரூபாயும், நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வே.ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மரு.இரா.வைத்தி நாதன், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன், எம்.என்.ராஜம் மற்றும் எஸ்.பி. முத்துராமன் ஆகியோரது குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.