தமிழ்நாடு செய்திகள்

அதிமுகவை பாராட்டிய அண்ணாமலை

Published On 2024-12-30 08:33 IST   |   Update On 2024-12-30 08:33:00 IST
  • யார் அந்த சார் என்ற வாசகம் சமூக வலைதளங்களில் வைரலானது.
  • எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் 'யார் அந்த சார்?' என்ற பதாகைகளை கையில் ஏந்தி அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை :

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சென்னை, கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் அந்த நபர் சம்பவத்தை தனது செல்போனில் படம் பிடித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கிடையே ஞானசேகரன் அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்யும் போது சார் என்று அழைத்து யாரிடமோ பேசியது தெரியவந்துள்ளது.

எனவே ஞானசேகரன் தவிர மேலும் சிலருக்கு இந்த விவாகரத்தில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அரசியல் கட்சிகளும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளன. யார் அந்த சார் என்ற வாசகம் சமூக வலை தளங்களில் வைரலானது.

இதையடுத்து, சென்னையின் மையப் பகுதியில் அமைந்துள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் 'யார் அந்த சார்?' என்ற பதாகைகளை கையில் ஏந்தி அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் அ.தி.மு.க. நடத்திய போராட்டத்திற்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் எக்ஸ் தள பக்கத்தில் செய்தி தொடர்பான வீடியோ ஒன்றை வெளியிட்டு, ஒரு சாமானியனைப் பாதிக்கும் பிரச்சனைகளில் தனிமனித அரசியல் ஒரு போதும் இருக்க முடியாது. அ.தி.மு.க.விற்கு பாராட்டுக்கள். இந்த பிரச்சனையை எடுத்துக்கொண்டு ஒரு முக்கியமான கேள்வியைக் கேட்டதற்கு என கூறியுள்ளார். 



Tags:    

Similar News