தமிழ்நாடு

பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.விற்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்- டி.டி.வி. தினகரன்

Published On 2022-12-04 09:19 GMT   |   Update On 2022-12-04 09:19 GMT
  • பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் ஊழல் நடப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. போடாத ரோடுகளுக்கு கூட போட்டதாக கணக்கு காட்டி கொள்ளை அடிக்கின்றனர்.
  • தி.மு.க.விற்கு கூட்டணி பலம் இருந்தாலும், வருகிற பாராளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் நிச்சயமாக பாடம் புகட்டி தோல்வியை தருவார்கள்.

மதுரை:

மதுரையில் கட்சி பிரமுகரின் திருமண விழாவில் பங்கேற்க அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று காலை மதுரை வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் ஊழல் நடப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. போடாத ரோடுகளுக்கு கூட போட்டதாக கணக்கு காட்டி கொள்ளை அடிக்கின்றனர். தி.மு.க. என்றாலே ஊழல் என்பதை தான் மேற்கண்ட நிகழ்வுகள் காட்டுகின்றன. ஒரு கட்சி என்பது அனைத்து மதத்துக்கும் நடுநிலையாக இருக்க வேண்டும். ஆனால் மதசார்பற்ற கட்சி என்று தி.மு.க. கூறிக்கொண்டு, இந்து மதத்திற்கு எதிராக பேசி வருகிறது.

தேர்தலின்போது அளித்த எந்த வாக்குறுதிகளையும் அவர்கள் நிறைவேற்றவில்லை. எனவே பொதுமக்கள் கொந்தளிப்புடன் உள்ளனர். தி.மு.க.விற்கு கூட்டணி பலம் இருந்தாலும், வருகிற பாராளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் நிச்சயமாக பாடம் புகட்டி தோல்வியை தருவார்கள். 2023-ம் ஆண்டில் அ.ம.மு.க.வின் தேர்தல் வியூகம் வெளிப்படும். ஜெயலலிதா மறைவிற்கு பின் ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். அதிகாரம், பணத்தை நம்பி மட்டும் தான், அவர்களுடன் சிலர் இருந்தனர்.

அ.தி.மு.க. செயல்படாமல் இருப்பதற்கு மேற்கண்ட 2 பேர் மட்டும்தான் காரணம். தமிழகத்தில் அ.ம.மு.க. எதற்காக தொடங்கப்பட்டது? என்பதை மேற்கண்ட 2 பேரும் புரிய வைத்து உள்ளனர். ஜல்லிக்கட்டு வழக்கில் தமிழக அரசு சரியான முறையை கையாண்டு பொதுமக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும். சசிகலா ஏன் மவுனமாக உள்ளார்? என்பது பற்றி, நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும்

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News