அண்ணாமலை என்ன செய்து கொண்டிருக்கிறார்?- காவிரி விவகாரத்தில் கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு
- வரைவு திட்டத்துக்கான ஒப்புதலையும் மத்திய அரசு வழங்கியது.
- பா.ஜனதா காவிரியை மையமாக வைத்து அரசியல் செய்கிறது.
சென்னை:
தமிழகத்துக்கு கர்நாடக அரசு தர வேண்டிய காவிரி தண்ணீரை தர மறுக்கிறது. இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது:-
தமிழகத்தில் ஆளும் தி.மு.க. அரசை பா.ஜனதா எப்படி குறை சொல்கிறதோ அதே போல் கர்நாடகத்தில் ஆளும் காங்கிரஸ் அரசை அங்குள்ள பா.ஜனதா குறை சொல்கிறது. அவர்களுக்கு காவிரி முக்கியமல்ல. அரசியல் தான் முக்கியம்.
காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடக அரசு முன் வந்ததும் முதலில் எதிர்ப்பு தெரிவித்தது பொம்மை. அடுத்ததாக எடியூரப்பா. 3-வதாக குமாரசாமி.
ஆரம்பத்தில் தண்ணீர் திறக்க முடியாத சூழலில் இருக்கிறோம் என்று துணை முதல்-மந்திரி சிவகுமார் கூறியதும் காங்கிரசாக இருந்தாலும் முதலில் கண்டனம் தெரிவித்தது தமிழக காங்கிரஸ். மேலும் இந்த விஷயத்தில் தமிழக அரசுக்கு துணை நிற்போம் என்ற அறிவித்தோம்.
ஆனால் இப்போது அங்குள்ள பா.ஜனதா தூயவர்கள் எதிர்ப்பதை தமிழக பா.ஜனதா கண்டிக்க வில்லை. இந்த நிமிடம் வரை கண்டித்து ஒரு வார்த்தை கூட அண்ணாமலை பேசவில்லை.
கடந்த முறை பா.ஜனதா ஆட்சியின் போது தான் மேகதாதுவில் அணை கட்ட ரூ.1000 கோடி ஒதுக்கினார்கள். வரைவு திட்டத்துக்கான ஒப்புதலையும் மத்திய அரசு வழங்கியது. இப்போதும் காவிரியில் தண்ணீர் திறந்து விடக் கூடாது என்பதில் அந்த அரசு உறுதியாக இல்லை. ஆனால் தயங்குகிறது. இந்த தயக்கத்துக்கு காரணம் பா.ஜனதாவின் எதிர்ப்பு தான். பா.ஜனதா காவிரியை மையமாக வைத்து அரசியல் செய்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.