தமிழ்நாடு

துணிகள் வாங்கி கொண்டு பணம் செலுத்தாமல் காரில் பறந்த டிப்-டாப் ஆசாமி

Published On 2023-11-18 05:17 GMT   |   Update On 2023-11-18 05:17 GMT
  • 5 துணி ரோல்கள் வேண்டும் என்று பணியில் இருந்த ஊழியரிடம் கூறி உள்ளார் டிப் டாப் ஆசாமி.
  • திருப்பூர் வடக்கு குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர்:

திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் துணி வாங்கிக் கொண்டு பணம் செலுத்தாமல் காரில் பறந்த டிப்டாப் ஆசாமி தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் புதிய பஸ் நிலையம் பின்புறம் சிவன் தியேட்டர்- பிச்சம்பாளையம் ரோட்டில் பிரபல பாலியஸ்டர் துணி விற்பனை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு அதிக அளவிலான வாடிக்கையாளர்கள் துணி வாங்க வருவதால் எந்த நேரமும் பரபரப்பாகவே இருக்கும். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த நிறுவனத்திற்கு சுமார் 40 வயது மதிக்கத்தக்க டிப்டாப் ஆசாமி ஒருவர் துணி வாங்க சென்றுள்ளார்.

அவர் வழக்கம் போல எல்லா வாடிக்கையாளரையும் போன்று தனக்கு தேவையான துணிகளை பார்வையிட்டுள்ளார். பின்னர் 5 துணி ரோல்கள் வேண்டும் என்று அங்கு பணியில் இருந்த ஊழியரிடம் கூறி உள்ளார் அந்த டிப்டாப் ஆசாமி. இதைத் தொடர்ந்து தான் பணம் செலுத்திவிட்டு வருவதாகவும், அதற்குள் துணி ரோல்களை தனது காரில் ஏற்றுமாறும் அந்த ஆசாமி கூறி உள்ளார். இதை நம்பிய ஊழியர் அந்த துணிகளை அவருடைய காரில் ஏற்றி உள்ளார்.

ஆனால் அந்த டிப்டாப் ஆசாமி பணத்தை செலுத்தாமல் கண்ணிமைக்கும் நேரத்தில் காரில் ஏறி அங்கிருந்து சிட்டாக பறந்தார். அதன் மதிப்பு ரூ.50 ஆயிரம் ஆகும். இதுகுறித்து திருப்பூர் வடக்கு குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் துணிகளை வாங்கிக் கொண்டு, அதற்கான பணத்தை செலுத்தாமல் காரில் பறந்த டிப்டாப் ஆசாமியின் வீடியோ வாட்ஸ்அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Tags:    

Similar News