தமிழ்நாடு

பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு - தமிமுன் அன்சாரி அறிவிப்பு

Published On 2024-03-19 09:06 GMT   |   Update On 2024-03-19 09:06 GMT
  • இந்த தேர்தல் களம் ஜனநாயக சக்திகளுக்கும், பாசிச சக்திகளுக்கும் இடையிலான சித்தாந்த போராட்டமாகும்
  • தேர்தலில் போட்டியிடுவதா? தேர்தல் அரசியலை முன்னிறுத்தும் ஜனநாயகத்தை பாதுகாப்பதா? என்ற நிலையில் இரண்டாவதை தேர்ந்தெடுத்திருக்கிறோம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி, வரும் பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அளிக்கையில், "இந்த தேர்தல் களத்தை ஜனநாயக சக்திகளுக்கும், பாசிச சக்திகளுக்கும் இடையிலான சித்தாந்த போராட்டமாக மனிதநேய ஜனநாயக கட்சி கருதுகிறது.

நாட்டின் பன்மை கலாச்சாரத்தையும், ஜனநாயக மாண்புகளையும் பாதுகாப்பது அவசர முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனையாக மாறியுள்ளதை கவனத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் போட்டியிடுவதா? தேர்தல் அரசியலை முன்னிறுத்தும் ஜனநாயகத்தை பாதுகாப்பதா? என்ற நிலையில் இரண்டாவதை தேர்ந்தெடுத்திருக்கிறோம்.

கடந்த இரண்டு வாரங்களாக சான்றோர்கள், அறிஞர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் உள்ளிட்டோரின் நல்லெண்ண கருத்துகளை உள்வாங்கி, 18.03.2024 அன்று நடைபெற்ற கட்சியின் தலைமை நிர்வாகக் குழுவில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தேசத்தை காக்கும் அறப்போரில் கட்டுமரத்தில் பயணிப்பதா? போர் கப்பலில் பயணிப்பதா? என்ற நிலையில், I.N.D.I.A கூட்டணி என்ற போர் கப்பலில் ஏறியுள்ளோம்.

தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான I.N.D.I A கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடும் 39 பாராளுமன்ற தொகுதிகளிலும், புதுச்சேரியிலும் இக்கூட்டணியின் வெற்றிக்காக களமிறங்கி பணியாற்றுவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது" என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News