தமிழ்நாடு

பிரதமர் மோடி எங்கள் boss, 3வது முறையாக மக்களவைத் தேர்தலிலும் Pass: ரவி பச்சமுத்து

Published On 2024-04-03 12:15 GMT   |   Update On 2024-04-03 12:21 GMT
  • முசிறி துறையூர் சாலையில் உள்ள பேக்கரியில் டீ குடித்த ரவி பச்சமுத்து, அங்கு துண்டுப் பிரசுரங்களை வழங்கினார்.
  • அப்போது, பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கில் பாரிவேந்தர் எம்.பி. தேர்தலில் போட்டியிடவில்லை என்றார்.

பெரம்பலூர்:

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியின் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தருக்கு ஆதரவாக முசிறி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட டாக்டர் ரவி பச்சமுத்து, தேசிய ஜனநாயக கூட்டணியின் பெருமைமிக்க பிரதமராக வீற்றிருக்கும் மோடி மூன்றாவது முறையாகவும் தேர்தலில் வென்று சாதனை படைப்பார் என திரண்டிருந்த வாக்காளர்களிடையே நம்பிக்கை தெரிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக அண்ணாமலையார் கோவிலுக்கு வருகை தந்த அவருக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இதையடுத்து, மாங்கரைப்பேட்டையில் குழுமியிருந்த பெண்களிடம் துண்டுப் பிரசுரங்கள் வழங்கி பாரிவேந்தருக்கு தாமரைச் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.


அதன்பின், திருச்சி மாவட்டம் முசிறியின் பல்வேறு இடங்களில் அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பாரிவேந்தர் மீண்டும் எம்.பி.யானால் அரியலூரில் இருந்து பெரம்பலூர் வழியாக நாமக்கல்லுக்கு ரெயில் பாதை, மகளிர் அரசு கல்லூரி, 1,500 குடும்பங்களுக்கு உயர்தர இலவச சிகிச்சை உள்பட பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு செய்வார் என உறுதி அளித்தார்.

பாரிவேந்தர் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கில் எம்.பி. தேர்தலில் போட்டியிடவில்லை. பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் போட்டியிடுகிறார். டாக்டர் பாரிவேந்தருக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து மீண்டும் எம்.பி.யாக வெற்றிபெறச் செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதனிடையே, முசிறி துறையூர் சாலையில் உள்ள பேக்கரியில் தேநீர் அருந்திய ரவி பச்சமுத்து, பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கியபோது, முசிறியில் மகளிர் கலைக்கல்லூரி, காவிரி ஆற்றில் தடுப்பணை, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்துத் தரவேண்டும் என மக்களும், விவசாயிகளும்கோரிக்கை விடுத்தனர்.

இதற்கு பதிலளித்து பேசிய அவர், பாரிவேந்தர் 3 கோரிக்கைகளையும் நிச்சயம் நிறைவேற்றுவார். அவர் உங்களுக்காக பணியாற்ற தாமரைச் சின்னத்தில் வாக்களியுங்கள் என கேட்டுக்கொண்டார்.

Tags:    

Similar News