பிரதமர் மோடி வருகை எதிரொலி: சென்னையில் டிரோன்கள் பறக்க தடை
- சென்னையில் நடைபெறும் பிரமாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார்.
- சென்னை விமான நிலையம், ஒய்.எம்.சி.ஏ. மைதானம், கல்பாக்கம் அணுமின் நிலையம் உள்ளிட்ட இடங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை:
பிரதமர் மோடி மீண்டும் நாளை தமிழகம் வருகிறார். ஒரே வாரத்தில் 2-வது முறையாக தேர்தல் பிரசாரத்துக்காக வருகை தரும் அவர் இந்த முறை சென்னையில் நடைபெறும் பிரமாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
இதற்காக நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி நாளை மாலை 5 மணியளவில் இந்த கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார்.
சென்னை விமான நிலையம், ஒய்.எம்.சி.ஏ. மைதானம், கல்பாக்கம் அணுமின் நிலையம் உள்ளிட்ட இடங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரதமர் மோடி வருகையொட்டி சென்னையில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் வருகையையொட்டி சென்னை காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், குற்றவியல் முறை சட்ட பிரிவு 144-ன் கீழ் சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் வருகிற 29-ந்தேதி வரை பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பாதுகாப்பு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ரெயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் விடுதிகளில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.