தமிழ்நாடு செய்திகள்

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு 707 கன அடியாக அதிகரிப்பு

Published On 2022-06-23 12:34 IST   |   Update On 2022-06-23 12:34:00 IST
  • கடந்த கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது.
  • மீண்டும் மழை பெய்தால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்படும்.

பூந்தமல்லி:

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. ஏரியின் மொத்த உயரம் 24 அடி. இதில் 23.50 அடிக்கு தண்ணீர் உள்ளது.

கடந்த ஒரு மாதமாக பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் அனுப்பப்பட்டதால் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. கடந்த கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது.

இதன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 23 அடியை தாண்டியதால் பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் அனுப்புவது கடந்த 3 நாட்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டது.

தொடர்ந்து மழை பெய்ததால் நேற்று முன்தினம் முதல்கட்டமாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 250 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. மழை நீடித்ததால் நேற்று உபரி நீர் திறப்பு மேலும் 250 கனஅடி அதிகரிக்கப்பட்டது. ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றம் மொத்தம் 500 கனஅடியாக இருந்தது. இதற்கிடையே செம்பரம்பாக்கம் ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை காரணமாக ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி 510 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

இதைத்தொடர்ந்து செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு 707 கனஅடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. ஏரிக்கு நீர் வரத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். மீண்டும் மழை பெய்தால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்படும் என்று தெரிகிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3645 மில்லியன் கனஅடி ஆகும். இதில் 3514 மி.கனஅடிக்கு தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News