தமிழ்நாடு

முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு மாநில அளவிலான மினி மாரத்தான் போட்டி- கனிமொழி தொடங்கி வைத்தார்

Published On 2024-03-03 05:46 GMT   |   Update On 2024-03-03 05:46 GMT
  • மாநிலம் முழுவதும் இருந்து சுமார் 1,500 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
  • முதல் பரிசாக தலா ரூ. 1 லட்சம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும் கனிமொழி எம்.பி. வழங்கினார்.

திருச்செந்தூர்:

தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு. க.ஸ்டாலின் 71-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஆண்கள், பெண்கள் என இரு பாலருக்குமான மாநில அளவிலான மினி மாரத்தான் போட்டி திருச்செந்தூரில் சட்டமன்ற அலுவலகம் முன்பு நடை பெற்றது.

நிகழ்ச்சிக்கு தமிழக மீன்வளம், மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

இதில் மாநிலம் முழுவதும் இருந்து சுமார் 1,500 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

ஆண்களுக்கான போட்டி திருச்செந்தூர் காயல்பட்டினம், ஆறுமுகநேரி, அடைக்கலாபுரம் வழியாக சுமார் 21 கிலோ மீட்டர் தொலைவிலும், பெண்களுக்கு திருச்செந்தூரில் இருந்து காயல்பட்டினம் வரையிலான சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவிலும் நடைபெற்றது.

கனிமொழி எம்.பி. கொடி அசைத்து மினி மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் விழா நடைபெற்றது. போட்டியில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த லட்சுமணன்-சூர்யா தம்பதியினர் வெற்றி பெற்றனர்.

இதனையடுத்து வெற்றி பெற்ற தம்பதியினருக்கு முதல் பரிசாக தலா ரூ. 1 லட்சம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும் கனிமொழி எம்.பி. வழங்கினார்.

2-வது பரிசாக 75 ஆயிரம், 3-வது பரிசாக ரூ. 50 ஆயிரம் உட்பட 10 பரிசுகள் தலா இருபாலர்களுக்கும் வழங்கப்பட்டது. போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டது.

விழாவில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தி.மு.க. மாநில வர்த்தகர் அணி இணை செயலாளர் உமரிசங்கர், திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவ ஆனந்தி, துணைத்தலைவர் ரமேஷ், நகர செயலாளர் சுடலை மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News