தமிழ்நாடு

ஆண்டுக்கு 2 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

Published On 2023-09-28 08:26 GMT   |   Update On 2023-09-28 08:26 GMT
  • அடுத்த இரு ஆண்டுகளில் மேலும் 50 ஆயிரம் பேருக்கு அரசு வேலைகள் வழங்கப்பட இருப்பதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
  • தமிழக அரசு பொறுப்பேற்ற போது இருந்ததைவிட இப்போது அரசு பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. இது சாதனை அல்ல.

சென்னை:

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் தி.மு.க. அரசு அமைந்த பிறகு கடந்த இரு ஆண்டுகளில் 12,576 பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டிருப்பதாகவும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 10,205 பேருக்கு நேற்று பணி ஆணைகள் வழங்கப்பட்டிருப்பதாகவும், அடுத்த இரு ஆண்டுகளில் மேலும் 50 ஆயிரம் பேருக்கு அரசு வேலைகள் வழங்கப்பட இருப்பதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

தமிழ்நாடு போன்ற பெரிய மாநிலங்களில் கடந்த இரு ஆண்டுகளில் வழங்கப்பட்டதாக கூறப்படும் அரசு வேலைகளின் எண்ணிக்கையும், அடுத்த இரு ஆண்டுகளில் வழங்கப்பட இருப்பதாக கூறப்படும் தமிழக அரசு வேலைகளின் எண்ணிக்கையும் போதுமானவை அல்ல.

தமிழ்நாட்டில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். ஆனால், ஓய்வு பெற்றவர்களின் எண்ணிக்கையில் பாதிக்கும் குறைவாக 22,781 பேருக்கு மட்டுமே அரசு வேலை வழங்கப்பட்டிருக்கிறது. ஒப்பீட்டளவில் தமிழக அரசு பொறுப்பேற்ற போது இருந்ததைவிட இப்போது அரசு பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. இது சாதனை அல்ல.

தமிழக அரசுத் துறைகளில் உள்ள காலியிடங்களை நிரப்பும் வகையிலும், தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஐந்தரை லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறை வேற்றும் வகையிலும் நடப்பு நிதியாண்டில் குறைந்தது ஒன்றரை லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்பட வேண்டும். அடுத்த இரு ஆண்டுகளில் ஆண்டுக்கு தலா 2 லட்சம் வீதம் 4 லட்சம் பேருக்கு அரசு வேலைகளை வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News