வழக்கு நிலுவையில் உள்ளபோது சிறப்பு கூட்டத்தை ஏன் கூட்ட வேண்டும்?: எடப்பாடி பழனிசாமி
- முதலமைச்சர் கொண்டுவந்த தனித்தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர்.
- தனித்தீர்மானம் மீது பேசுகையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
சென்னை:
கவர்னர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்புவதற்காக தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் நடந்து வருகிறது. இதில் முதலமைச்சர் முன்மொழிந்த தனித்தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
அரசின் தனித்தீர்மானத்தை முதலமைச்சர் கொண்டு வந்துள்ளார். மசோதாக்களில் இருக்கும் சட்ட சிக்கல்கள் குறித்து அரசு ஆய்வு செய்ய வேண்டும். 10 சட்ட முன்வடிவுகளையும் ஆளுநர் நிராகரிக்கவில்லை, நிறுத்தி வைத்துள்ளதாக கருதுகிறேன். மேலும், ஏற்கனவே நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்காததால் சுப்ரீம் கோர்ட்டை அரசு நாடியுள்ளது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வருவதற்குள் ஏன் சிறப்பு கூட்டத்தைக் கூட்டவேண்டும். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைத்தால் சிறப்பு கூட்டம் கூட்டுவதற்கு அவசியம் இல்லாமல் போய்விடும்.
அவசர, அவசரமாக ஏன் சிறப்பு கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என மக்களுக்கு சந்தேகம் ஏற்படுகிறது எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.