தமிழ்நாடு

ராகுல் பதவி பறிப்பை கண்டித்து தமிழகத்தில் பல இடங்களில் காங்கிரசார் போராட்டம்

Published On 2023-03-25 10:31 GMT   |   Update On 2023-03-25 10:31 GMT
  • பிரதமர் மோடியின் புகைப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

சென்னை:

ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து தமிழகத்தில் சில இடங்களில் இன்று காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை சிக்னல் அருகே சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காங்கிரஸ் கட்சி மாநில பொதுச் செயலாளர் காங்கேயம் குமார் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட காங்கிரசார் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் பிரதமர் மோடியின் புகைப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த நசரத்பேட்டை போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் வைத்தனர். இந்த போராட்டத்தின் காரணமாக பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கலில் ராஜீவ்காந்தி சிலை சந்திப்பில் வக்கீல் ராஜேஷ்குமார் எம். எல்.ஏ. தலைமையில் காங்கிரசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட ராஜேஷ்குமார் எம். எல்.ஏ. உட்பட 100-க்கும் மேற்பட்டோரை கருங்கல் போலீசார் கைது செய்தனர். இப்போராட்டத்தையொட்டி குளச்சல் டி.எஸ்.பி. தங்கராமன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு இளைஞர் காங்கிரஸ் சார்பில் இன்று மறியல் போராட்டம் நடந்தது. மாவட்ட துணைத் தலைவர் சகாய பிரவீன் தலைமை தாங்கினார். நாகர்கோவில் மாநகர தலைவர் நவீன் குமார் தொடங்கி வைத்தார்.

போலிங் பூத் தலைவர் ராதாகிருஷ்ணன், இளைஞர் காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் நரேந்திர தேவ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மேற்கு மண்டல தலைவர் சிவ பிரபு, வடக்கு மண்டல தலைவர் செல்வன், நாகர்கோவில் மாநகராட்சி மண்டல தலைவர் செல்வகுமார் மற்றும் நிர்வாகிகள் தங்கம், சோனி விதுலா, அலெக்ஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலையில் அமர்ந்து மத்திய அரசை கண்டித்தும் பிரதமர் மோடியை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். மறியல் போராட்டத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கீழையூர் பஸ் நிலையம் முன்புள்ள காந்தி சிலை முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கிராம கமிட்டி தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர்கள் துரைபாண்டி, பொன். கார்த்திக், வட்டார தலைவர் வைரவன், மணியன், ஒன்றிய கவுன்சிலர் மலைச்சாமி, தனியாமங்கலம் மாதவன், சண்முக வேல், பஞ்சவர்ணம் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட் டத்தில் பங்கேற்றவர்கள் மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து கோஷமிட்டனர்.

இதே போல் சிவகங்கை நகரில் அரண்மனை வாசல் முன்பு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி தலைமையில் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். அப்போது அவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட முயன்றனர். உடனே அங்கிருந்த பாதுகாப்பு போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

ஈரோடு மூலப்பாளையத்தில் ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன் மனித சங்கிலி மற்றும் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார். இதில் 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சாலையில் இரு கைகளையும் கோர்த்து நின்றபடி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.எம்.பழனிச்சாமி, ஒன்றிய செயலாளர்கள், வட்டார தலைவர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் கடைவீதியில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமேசுவரம் தலைமையில் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News