தமிழ்நாடு

விபத்துக்குள்ளான கார் மற்றும் இறந்து போன ஸ்ரீவர்ஷன், லலிதா தம்பதியை படத்தில் காணலாம். 

கோட்டக்குப்பம் அருகே விபத்து: ஐகோர்ட்டு அலுவலர்-மனைவி பலி

Published On 2023-08-12 05:52 GMT   |   Update On 2023-08-12 05:52 GMT
  • விபத்தில் அப்பளம் போல நொறுங்கிய காரில் பலத்த காயங்களுடன் தந்தை, தாய், மகன் என 3 பேரும் சிக்கி தவித்தனர்.
  • மகன் சிவராமகிருஷ்ணன் பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

வானூர்:

சென்னை மேற்கு மாம்பலம் சுப்பையா நகரை சேர்ந்தவர் ஸ்ரீவர்ஷன் (வயது 58). உயர்நீதிமன்றத்தில் உதவி அலுவலராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி லலிதா (55), மகன் சிவராமகிருஷ்ணன் (23) ஆகியோருடன் நேற்று இரவு மயிலாடுதுறையில் உள்ள கோவிலுக்கு செல்ல காரில் புறப்பட்டார். கிழக்கு கடற்கரை சாலையில் வந்த இந்த காரை சிவராமகிருஷ்ணன் ஓட்டி வந்தார்.

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகேயுள்ள மஞ்சக்குப்பம் பகுதியில் கார் வந்தபோது, அடையாளம் தெரியாத நபர் திடீரென சாலையை கடக்க முயற்சித்தார். அவர் மீது மோதாமல் இருக்க சிவராமகிருஷ்ணன் காரினை திருப்பினார். இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், அருகிலிருந்த மரத்தின் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் அப்பளம் போல நொறுங்கிய காரில் பலத்த காயங்களுடன் தந்தை, தாய், மகன் என 3 பேரும் சிக்கி தவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த கோட்டக்குப்பம் போலீசார், அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் 3 பேரையும் மீட்டனர். புதுவை மாநிலம் கனகசெட்டிக்குளத்தில் உள்ள பிம்ஸ் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

இதில் சிகிச்சை பலனின்றி உயர்நீதிமன்ற உதவி அலுவலர் ஸ்ரீவர்ஷன், அவரது மனைவி லலிதா இருவரும் இறந்தனர். இவர்களது மகன் சிவராமகிருஷ்ணன் பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து தொடர்பாக கோட்டக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News