தமிழ்நாடு

நாய் என்றைக்கும் சிங்கமாகாது, ஓநாயாக வேண்டுமானால் ஆகலாம் - டிடிவி தினகரன்

Published On 2024-03-31 13:51 GMT   |   Update On 2024-03-31 13:51 GMT
  • ஜெயலலிதா இருந்தவரை டிடிவி தினகரன் வீட்டுக்கு காவல் நாயாக இருந்திருக்கிறோம்
  • இப்ப நீங்க எங்களை சீண்டி பார்த்தீங்கன்னு சொன்னா அதுக்கு அ.தி.மு.க. இரண்டரை கோடி தொண்டர்கள் சீறும் சிங்கமாக விஸ்வரூபம் எடுத்து இருக்கிறோம்

பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் தேனி தொகுதியில் போட்டியிடும் நாராயணசாமியை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், "பாஜக கூட்டணியில் அமமுக என்று சொல்லுபவர் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பக்கம் எட்டிப்பார்க்காதவர், வராதவர். ஜெயலலிதாவால் நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியில் இருந்து 10 ஆண்டுகளுக்கும் மேலே ஒதுக்கி வைக்கப்பட்டார். ஜெயலலிதா மறைந்த பிறகுதான் அவர் தமிழ்நாட்டிலேயே தலை காட்ட ஆரம்பித்தார்.

ஆர்.கே.நகர் தேர்தலில் நின்று மக்களிடையே 20 ரூபாய் நோட்டை காண்பித்து ஏமாற்றி அந்த தொகுதி பக்கமே போகாமல் அந்த தொகுதியிலே நிற்க முடியாமல் கோவில்பட்டியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் நின்றார். அங்கேயும் மக்கள் அவர் மீது நம்பிக்கை வைக்காமல் அவரை புறக்கணித்து தோல்வி அடையச் செய்தார்கள். கடைசி புகலிடமாக தேனி பாராளுமன்ற தொகுதியை தேடி வந்திருக்கிறார். இங்கேயும் மக்கள் ஏற்க தயாராக இல்லை. வீராப்பு எல்லாம் தேனி தொகுதியில் எடுபடாது என்று அவருக்கு தெரியும்.

ஜெயலலிதா இருந்தவரை உங்களை பார்த்து பயந்தது உண்மைதான். இப்ப எல்லாம் நீங்கள் காட்டுகிற பூச்சாண்டிக்கு எல்லாம் புழு கூட பயப்படாது. அ.தி.மு.க. தொண்டன் சுதந்திர காற்றை சுவாசிக்கிறான். உங்களிடம் இருந்து விடுதலை பெற்று இந்த இயக்கமும், இந்த இயக்க தொண்டர்களும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சுதந்திர காற்றை சுவாசிக்கிறோம். அதனால் இந்த பூச்சாண்டி காட்டுறது, நையாண்டி பண்றது எல்லாம் ஜெயலலிதா இருந்தவரைக்கும் கேட்டுக்கிட்டு இருந்தது உண்மைதான். உங்க வீட்டுக்கு காவல் நாயாக இருந்திருக்கிறோம். இப்ப நீங்க எங்களை சீண்டி பார்த்தீங்கன்னு சொன்னா அதுக்கு அ.தி.மு.க. இரண்டரை கோடி தொண்டர்கள் சீறும் சிங்கமாக விஸ்வரூபம் எடுத்து இருக்கிறோம் என்று கூறினார்.

இந்நிலையில் ஆர்.பி.உதயகுமார் பேசியதற்கு "நாய் என்றைக்கும் சிங்கமாகாது.. ஓநாயாக வேண்டுமானால் ஆகலாம்" என்று டிடிவி தினகரன் பதிலடி கொடுத்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்து பேசிய டிடிவி தினகரன், துரோகிகளின் கைகளில் தற்போது அதிமுக உள்ளது. அதை மீட்பதற்கு தான் நானும் ஓ.பன்னீர்செல்வமும் போராடி கொண்டிருக்கிறோம். வீட்டுக்காவலில் இருந்தவர்கள் நன்றியுள்ளவர்களாக இருப்பார்கள். இவர்களை போல துரோகம் செய்யமாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News