#HCMaduraiBench கோவில் நிலங்கள் தொடர்பான வழக்குகளை 6 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும்- ஐகோர்ட்
- ஆக்கிரமிப்புகளை அகற்ற எந்த சட்டப்பூர்வ தடையும் இல்லை.
- அதிகாரிகளுக்கு போதுமான பாதுகாப்பு வழங்குவதை கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உறுதி செய்ய வேண்டும்.
மதுரை:
திருத்தொண்டர் சபை அறங்காவலர் ராதா கிருஷ்ணன் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த அவமதிப்பு மனுவில் கூறியிருந்ததாவது:-
கரூர் வெண்ணெய்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான 507 ஏக்கர் நிலத்தை மீட்கும் உத்தரவை 6 ஆண்டுகளாக செயல்படுத்தாத அதிகாரிகள் மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்து நீதிபதிகள் வேல்முருகன், புகழேந்தி ஆகியோர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
கோவில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோர்ட்டு உத்தரவிட்டது. அந்த உத்தரவு அடிப்படையில் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை மேற்கொண்ட போது அதை இனாம் நில விவசாயிகள் குத்தகைதாரர்கள், வீட்டு மனை உரிமையாளர்கள் பாதுகாப்பு இயக்கம் போன்ற சில அமைப்புகள் போராட்டம் நடத்தி தடுத்துள்ளது. சட்டத்துக்கு புறம்பான செயல்களால் கோர்ட்டு உத்தரவை தடுக்க முடியாது. இந்த போராட்டத்தில் வக்கீல்களும் மக்கள் பிரதிநிதிகளும் பங்கேற்றது வருத்தத்தை தருகிறது.
ஆக்கிரமிப்புகளை அகற்ற எந்த சட்டப்பூர்வ தடையும் இல்லை. இருப்பினும் அறநிலையத்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, கோவில் நிலங்கள் தொடர்பான வழக்குகளைக் கையாளும் சிவில் கோர்ட்டுகள், முடிந்த வரை, முன்னுரிமை அடிப்படையில் 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும். மீட்கப்பட்ட நிலங்கள், மீட்பு நடவடிக்கைகள், வழக்குகள், வழக்கின் நிலை மற்றும் ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையை 3 மாதங்களுக்கு ஒரு முறை ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்.
வெண்ணெய்மலை கோவில் ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றும் நடவடிக்கையை மேற்கொள்ளும் அதிகாரிகளுக்கு போதுமான பாதுகாப்பு வழங்குவதை கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உறுதி செய்ய வேண்டும். கோவில் ஆக்கிரமிப்பு மீட்புக்கு எதிராக போராட்டம் நடத்திய அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து சங்கங்களின் பதிவாளர் விசாரித்து, சட்டவிரோத நடவடிக்கைகள் கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.