செய்திகள்
ஓ. பன்னீர்செல்வம்

அனைத்து பணியாளர்களுக்கும் ஒரே நேரத்தில் ஊதியம் வழங்க வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம்

Published On 2021-11-02 08:53 GMT   |   Update On 2021-11-02 08:53 GMT
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் பணிபுரியும் அனைவருக்கும் ஒரே நேரத்தில் ஊதியம் கிடைப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் ஒரே பணியாளர் வருகைப் பதிவேட்டின் கீழ், ஒரே இடத்தில், ஒன்றாக, குறிப்பிட்ட நாட்களுக்கு பணியாற்றியவர்களுக்கான ஊதியம் ஒரு சில பிரிவினருக்கு 15 முதல் 20 நாட்களுக்குள் அளிக்கப்பட்டு விடுவதாகவும், ஒருசில பிரிவினருக்கு இரண்டு மாதங்கள் ஆகின்றன என்றும், இதன் காரணமாக பணியாளர்களிடையே சந்தேகமும், கசப்பு உணர்வும் ஏற்படுவதாகவும், இது குறித்து ஊராட்சி அதிகாரிகள் கருத்து தெரிவிக்கையில், அனைவருக்குமான ஊதியம் ஒன்றாகத்தான் சமர்ப்பிக்கப்படுகிறது என்றும், ஆனால் அதற்கான ஊதியம் பிரித்து அனுப்பப்படுவதாகவும், இந்தப் பிரச்சனை ராஜஸ்தான், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், பீகார், கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் நிலவுவதாகவும் பத்திரிகையில் செய்திகள் வந்துள்ளன.

இது குறித்து தமிழ்நாட்டின் ஊரக வளர்ச்சித்துறை மூத்த அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ஒரு பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் பணிபுரிந்ததற்கான ஊதியம் மற்ற பிரிவினரைக் காட்டிலும் ஜூன் மாதத்தில் தாமதமாக கிடைத்ததாக ஏராளமான புகார்கள் வந்திருப்பதாக கூறியுள்ளார் என பத்திரிகையில் செய்தி வந்துள்ளது. இது மிகவும் வருத்தம் அளிக்கும் செயல் ஆகும்.

இந்த நிலை நீடித்தால் இதனால் ஏற்படும் பின் விளைவுகள் கடுமையாக இருப்பதோடு, சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாக அமைந்து விடும்.

ஊதியத்தை ஒரு பிரிவினருக்கு முன்னதாகவும் மற்றொரு பிரிவினருக்கு தாமதமாகவும் அளித்தால் பணிபுரிபவர்களிடையே மனக்கசப்பை உண்டாக்குவதோடு, தாமதமாக ஊதியம் பெறுபவர்களின் பணிபுரியும் ஆர்வமும் குறைந்துவிடும்.

இந்தியாவில் உள்ள பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த மக்களுக்கு சரியாக எவ்வளவு நிதியுதவி அளிக்கப்படுகிறது என்பதை கண்டறியும் பொருட்டு மத்திய அரசு புதிய முறையை நடப்பாண்டு முதல் செயல்படுத்தி உள்ளது தான் இதற்கு காரணம்.

இதில் உள்ள சாதக பாதகங்களை மத்திய அரசிடம் எடுத்துச் சொல்ல வேண்டிய கடமையும், பொறுப்பும் மாநில அரசிற்கு உண்டு. நேற்றுகூட முதல்-அமைச்சர் இத்திட்டத்தின் கீழ் நிலுவையாக உள்ள 1,178 கோடி ரூபாயை விடுவிக்குமாறு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.

ஆனால் மத்திய அரசு தற்போது பின்பற்றி வரும் நடைமுறையில் உள்ள சாதக, பாதகங்களைப் பற்றி ஒன்றும் குறிப்பிடவில்லை.

எனவே, முதல்-அமைச்சர் இதில் உடனடியாக கவனம் செலுத்தி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் பணிபுரியும் அனைவருக்கும் ஒரே நேரத்தில் ஊதியம் கிடைப்பதற்கான நடவடிக்கையை எடுத்து, அனைத்துப் பிரிவினரிடமும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News