செய்திகள்
மரணம்

அறந்தாங்கி அருகே இடி தாக்கி வீடு இடிந்து மூதாட்டி பலி

Published On 2019-11-05 04:57 GMT   |   Update On 2019-11-05 04:57 GMT
அறந்தாங்கி அருகே இடி தாக்கி வீடு இடிந்து மூதாட்டி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அறந்தாங்கி:

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர பகுதிகளில் கொட்டித் தீர்த்த மழையால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டது.

அறந்தாங்கி மேல்மங்கலம் பகுதியை சேர்ந்தவர் அமராவதி (வயது 58). இவரது பக்கத்து வீட்டில் அவரது சகோதரர் முருகன் வசித்து வந்தார். நேற்றிரவு அமராவதி வீட்டில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது இடி மின்னல் பலமாக தாக்க, லேசான தூரலுடன் மழை பெய்தது.

முருகன் வீட்டை இடி தாக்கியதில், வீட்டின் ஒரு பக்க சுற்றுச்சுவர் இடிந்து, அருகில் உள்ள அமராவதி வீட்டின் மேல் விழுந்தது. தூங்கி கொண்டிருந்த அமராவதியின் மீது விழுந்ததில் அவர் இடிபாடுகளுக்கிடையே சிக்கி உயிருக்கு போராடினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் முடியவில்லை.

இதையடுத்து நாகுடி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அமராவதியை மீட்க முயன்ற போது, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரிய வந்தது.

இதையடுத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News