செய்திகள்

பார் உரிமையாளர் தற்கொலை- அதிமுக பிரமுகர் மீது வழக்கு பதிவு

Published On 2019-05-29 10:33 GMT   |   Update On 2019-05-29 10:33 GMT
மாமல்லபுரம் டி.எஸ்.பி. அலுவலகம் முன்பு டாஸ்மாக் பார் உரிமையாளர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக அ.தி.மு.க. பிரமுகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாமல்லபுரம்:

திருப்போரூர் அருகே உள்ள தண்டலம் கிராமத்தில் வசித்து வந்தவர் நெல்லையப்பன் (வயது 37). நெல்லை மாவட்டத்தை சேர்ந்த இவருக்கு சுமதி என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.

இவர் திருப்போரூர், கேளம்பாக்கம், கண்டிகை, நாவலூர், சிங்கபெருமாள் கோவில், மாமல்லபுரம் உள்ளிட்ட இடங்களில் தண்டலத்தை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் ஆனந்தனிடம் மேல் வாடகைக்கு டாஸ்மாக் பார் எடுத்து நடத்தி வந்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை மாமல்லபுரம் போலீஸ் டி.எஸ்.பி. அலுவலகத்துக்கு நெல்லையப்பன் வந்தார். திடீரென அவர் தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார்.

அவரை போலீசார் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நெல்லையப்பன் பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் மாமல்லபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நெல்லையப்பன் இறப்பதற்கு முன்பு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் மாஜிஸ்திரேட்டு காயத்ரிதேவியிடம் வாக்கு மூலம் அளித்தார்.

அதில் பார் நடத்துவதற்கு 2 இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ் அதிகாரி ஆகியோருக்கு மாதம் ரூ.1 லட்சம் முதல் ரூ.1½லட்சம் வரை லஞ்சம் கொடுக்க வேண்டி உள்ளது என்று கூறி இருந்தார்.

மேலும் நெல்லையப்பன் தனது பேஸ்புக்கிலும் தற்கொலை செய்வதற்கு முன்பு ஒரு வீடியோவை பதிவிட்டு உள்ளார்.

அந்த வீடியோவில், “பார் மேல் வாடகை எடுத்து நடத்தியதில் இதுவரை 7 வருடத்தில் அ.தி.மு.க. பிரமுகர் ரூ.19 கோடிக்கு மேல் மனசாட்சி இல்லாமல் பணம் பறித்து விட்டார். போலீசாருக்கு மாதாமாதம் மாமூல் கொடுத்தாக வேண்டும். ஒரு நாள் தவறினாலும் பாரை இழுத்து மூடுவார்கள்” என்று உருக்கமாக பேசி இருந்தார்.

பணம் கொடுப்பது தொடர்பாக நெல்லையப்பனுக்கும், அ.தி.மு.க. பிரமுகர்- போலீஸ் அதிகாரிகளுக்கும் இடையே சில மாதங்களாக தகராறு ஏற்பட்டு உள்ளது.

இது தொடர்பாக அவர் புகார் கொடுப்பதற்காக டி.எஸ்.பி.அலுவலகத்துக்கு வந்ததாக தெரிகிறது. இதன் பின்னரே அங்கு நெல்லையப்பன் தீக்குளித்து உள்ளார்.

இதற்கிடையே மாஜிஸ்திரேட்டிடம் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அ.தி.மு.க. பிரமுகர் ஆனந்தன் மீது போலீசார் வழக்குபதிவு செய்து உள்ளனர்.

இதேபோல் போலீஸ் அதிகாரிகள் மீதான லஞ்ச குற்றச்சாட்டு குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி விசாரணை நடத்தி வருகிறார். அவர்கள் மீது விரைவில் துறை ரீதியிலான நடவடிக்கை பாயும் என்று தெரிகிறது.
Tags:    

Similar News