உலகம்

ஜெர்மனியில் வங்கி சுவரில் துளையிட்டு ரூ.300 கோடி கொள்ளை - முகமூடி கும்பல் கைவரிசை

Published On 2026-01-01 08:22 IST   |   Update On 2026-01-01 08:22:00 IST
  • கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தையொட்டி நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
  • கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

ஜெர்மனி நாட்டின் பிரபல வங்கியாக ஸ்பார்கசி உள்ளது. நாட்டின் மிக பழமையான வங்கிகளில் ஒன்றான ஸ்பார்கசி 1774-ம் ஆண்டில் அந்த நாட்டின் பெருவணிகர்களின் கூட்டு முயற்சியாலும் மன்னர்களாலும் தொடங்கப்பட்டது. முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்களில் ஸ்பார்கசி வங்கி அந்த நாட்டின் நிதியை கையாண்டு பெரும் பங்கு ஆற்றியது.

தற்போது அந்த நாட்டின் அனைத்து பகுதிகளிலும் ஸ்பார்கசி வங்கியின் கிளை அமைக்கப்பட்டு வங்கி சேவைகளை வழங்கி வருகிறது. அந்தவகையில் அங்குள்ள ஜெர்மனியின் மேற்கு பகுதியில் உள்ள கெல்சென்கிர்சென் நகரில் ஸ்பார்கசி வங்கியின் கிளை ஒன்று உள்ளது.

இந்த வங்கியில் நகரை சேர்ந்த பலர் கணக்கு தொடங்கி வாடிக்கையாளராக இருந்து வருகிறார்கள். கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தையொட்டி நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கெல்சென்கிர்சென் நகரில் இயங்கி வந்த ஸ்பார்கசி வங்கியும் கடந்த வாரம் முதல் மூடப்பட்டது.

இந்தநிலையில் நேற்று அதிகாலை அந்த வங்கி கட்டிடத்தில் இருந்து தீ பரவியதற்கான எச்சரிக்கை ஒலி ஒலிக்கப்பட்டது. இதனால் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வங்கியை சோதனையிட்டனர்.

அப்போது வங்கி சுவரில் துளையிட்டு கொள்ளையிடப்பட்டது தெரிந்தது. உடனடியாக வங்கி நிர்வாகத்துக்கு தெரிவிக்கப்பட்டு அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

அதில் கருப்பு முகமூடி அணிந்த கொள்ளை கும்பல் ஒன்று, சொகுசு கார் ஒன்றில் வந்து கார் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டு சாவகாசமாக வங்கி நிலத்தடி லாக்கர் அறைக்குள் துளையிட்டு உள்ளே சென்றனர். பின்னர் அங்கிருந்த 3 ஆயிரத்திற்கும் அதிகமான பாதுகாப்பு பெட்டிகளை திறந்து அதில் இருந்து நகை மற்றும் ரொக்கத்தை திருடி தப்பியது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிந்தது.

வங்கியில் கொள்ளை போன ரொக்கம் மற்றும் நகைகளில் மொத்த மதிப்பு ரூ.300 கோடி (30 மில்லியன் யூரோ) ஆகும். அவர்கள் வந்த கார் சில நாட்களுக்கு முன்பு கிழக்கு ஜெர்மனியில் திருடப்பட்டது தெரிந்தது. வங்கி கொள்ளை குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் வங்கி முன்பு திரண்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கொள்ளையர்களுக்கு வலைவீசி உள்ளதாக தெரிவித்தனர்.

Tags:    

Similar News