உலகம்

வங்கதேச இடைக்கால தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் முகமது யூனுஸ்.. இன்று பிரதமராகிறார் தாரிக் ரஹ்மான்

Published On 2026-02-17 05:33 IST   |   Update On 2026-02-17 05:43:00 IST
  • இந்தியா சார்பில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கலந்து கொள்கிறார்.
  • யூனுஸ் தொலைக்காட்சியில் உரையாற்றினார்.

வங்கதேசத்தில் 2024 ஆகஸ்டில் மாணவர் போராட்டத்தால் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்தது. தொடர்ந்து அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது.

ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்த 18 மாதங்கள் கழித்து கடந்த பிப்ரவரி 12 அன்று அங்கு பொதுத்தேர்தல் நடைபெற்றது.

மொத்தம் உள்ள 300 இடங்களில் 212 இடங்களைக் கைப்பற்றி தாரிக் ரஹ்மான் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாதக் கட்சி (BNP) கூட்டணி வெற்றி அமோக வெற்றி பெற்றது.

 BNP சார்பில் போட்டியிட்ட நான்கு சிறுபான்மை சமூக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதில் கோயேஷ்வர் சந்திர ராய் மற்றும் நிதாய் ராய் சவுத்ரி ஆகிய இரண்டு இந்துத் தலைவர்களும் அடங்குவர். 

இந்நிலையில் வங்கதேசத்தில் நிலவி வந்த இடைக்கால ஆட்சி முடிவுக்கு வந்துள்ள நிலையில், அந்நாட்டின் இடைக்காலத் தலைவர் முஹம்மது யூனுஸ் தனது பதவியை நேற்று அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்தார்.

தொடர்ந்து தாரிக் ரஹ்மான் புதிய பிரதமராக இன்று பொறுப்பேற்கிறார். முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகனான தாரிக் ரஹ்மான் கடந்த 17 ஆண்டுகளாக லண்டனில் வசித்து வந்தார்.

கடந்த டிசம்பரில் தாய் கலீதாவின் மரணத்தின் பின் அவர் நாடு திரும்பினார். கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற 3 மாதத்தில் மாபெரும் வெற்றி பெற்று வங்கதேச பிரதமர் ஆகிறார். சுமார் 32 முதல் 42 பேரை கொண்ட அமைச்சரவையை தாரிக் ரஹ்மான் அமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இன்று அவரின் பதவியேற்பு விழாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கலந்து கொள்கிறார்.

இதற்கிடையே தொலைக்காட்சியில் உரையாற்றிய யூனுஸ், "இன்று இடைக்கால அரசு விலகுகிறது. ஆனால், நாம் தொடங்கியுள்ள ஜனநாயகம், கருத்துச் சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் தொடர்ந்து பாதுகாக்கப்பட வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

Tags:    

Similar News