ரஷியாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குமா? வாங்காதா? - ஜெய்சங்கர் பதில்
- ஜெர்மனியில் மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் இருவரும் பேசினர்.
- குறைந்த வரியை மீண்டும் உயர்த்துவோம்.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க மாட்டோம் என்ற நிபந்தனையுடன் அமெரிக்காவுடன் இந்தியா வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டது.
ரஷிய எண்ணெயை இந்தியா வாங்காது என அமெரிக்கா கூறி வந்தாலும், இந்தியா தரப்பில் தெளிவான பதில் இல்லை.
இதற்கிடையே ஜெர்மனியில் மியூனிக் பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ கூறுகையில், "ரஷியாவின் எண்ணெய் மீது அமெரிக்கா கூடுதல் தடைகளை விதித்துள்ளது.
இந்தியாவுடனான எங்கள் பேச்சுவார்த்தையில், கூடுதலாக ரஷிய எண்ணெயை வாங்குவதை நிறுத்துவதற்கான அவர்களின் உறுதிப்பாட்டை நாங்கள் பெற்றுள்ளோம்" என்றார்.
தொடர்ந்து இதே மாநாட்டில் மற்றொரு அமர்வில் பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ரூபியோவின் கூற்றை நேரடியாக உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை.
ஜெய்சங்கர் கூறியதாவது, "இந்தியாவின் முடிவுகள் எப்போதும் அதன் மூலோபாயத் தன்னாட்சி அடிப்படையிலேயே இருக்கும். இது இந்தியாவின் வரலாறு மற்றும் வளர்ச்சியோடு பின்னிப் பிணைந்த ஆழமான கொள்கை.
உலகளாவிய எரிசக்தி சந்தை தற்போது மிகவும் சிக்கலான நிலையில் உள்ளது. எண்ணெய் கொள்முதல் என்பது அரசியல் அழுத்தத்தின் அடிப்படையில் அமையாது.
இந்திய எண்ணெய் நிறுவனங்கள், ஐரோப்பிய நிறுவனங்களைப் போலவே, கிடைக்கும் தன்மை, விலை மற்றும் அபாயங்கள் ஆகியவற்றை ஆராய்ந்தே முடிவெடுக்கும்" என்று தெரிவித்தார்.
அமெரிக்காவுடன் போட்ட ஒப்பந்தப்படி ரஷிய எண்ணெய் கொள்முதலை இந்தியா நிறுத்துமா என்ற நேரடி கேள்விக்கு பதில் அளித்த ஜெய்சங்கர், "எண்ணெய் நிறுவனங்கள் தங்களுக்கு எது சிறந்தது என்று கருதுகிறார்களோ அதையே செய்வார்கள்" என்று முடித்தார்.
இதற்கிடையே வெனிசுலாவில் இருந்து எண்ணெய் கொள்முதல் செய்ய அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்கினால் இந்தியாவுக்கு 25% இருந்து 18% ஆக குறைந்த வரியை மீண்டும் உயர்த்துவோம் என அமெரிக்கா மிரட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.