செய்திகள்

விராலிமலை அருகே விபத்து- டிரைவர் பலி

Published On 2019-05-28 05:49 GMT   |   Update On 2019-05-28 05:49 GMT
திருச்சி அருகே உள்ள விராலிமலையில் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பஸ் டிரைவர் பலியானார். 30 பயணிகள் காயமடைந்தனர்.
விராலிமலை:

சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு நேற்றிரவு தனியார் ஆம்னி பஸ் ஒன்று புறப்பட்டது. அதில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். பஸ்சை நெல்லை சீவலப்பேரியை சேர்ந்த டிரைவர் முருகன் (வயது 36) ஓட்டினார்.

இன்று அதிகாலை 4 மணியளவில் திருச்சி அருகே உள்ள விராலிமலை குறிச்சிப்பிரிவு நான்குவழிச்சாலை பகுதியில் பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்ற லாரியை முந்த முயன்ற போது, நிலைதடுமாறியதில் லாரியின் பின்பக்கம் வேகமாக பஸ் மோதியது.

இதில் தாறுமாறாக ஓடிய பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பஸ் டிரைவர் முருகன் இடிபாடுகளுக்கிடையே சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். பஸ்சில் இருந்த பயணிகள் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இது குறித்த தகவல் அறிந்ததும் விராலிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் மதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் காயமடைந்த அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் பலத்த காயமடைந்த நெல்லை வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்த ஜாஸ்மின் (18), விழுப்புரம் மேலபாதி ரெட்டியார் தெருவை சேர்ந்த தாமோதரன் (37), சென்னை ஏரியாறு பகுதியை சேர்ந்த விஜயகுமார் (47), அருப்புக்கோட்டையை சேர்ந்த செல்வம் (45) ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்றவர்கள் சிகிச்சை பெற்று அங்கிருந்து திரும்பி சென்றனர்.

டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலை நடந்த இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News