செய்திகள்

25-ந்தேதி தேர்தல் பிரசாரம் தொடங்குகிறார் பிரேமலதா

Published On 2019-03-21 07:32 GMT   |   Update On 2019-03-21 07:32 GMT
பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வருகிற 25-ந்தேதி கன்னியாகுமரி தொகுதியில் பிரேமலதா தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். #LSPolls #DMDK #PremalathaVijayakanth
சென்னை:

பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. வடசென்னை, திருச்சி, கள்ளக்குறிச்சி, விருதுநகர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது.

அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா பிரசாரம் செய்ய உள்ளார். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யும் வகையில் அவரது பிரசார திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி வருகிற 25-ந்தேதி கன்னியாகுமரி தொகுதியில் பிரேமலதா தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். அன்று கன்னியாகுமரி தொகுதி பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். பின்னர் அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்கிறார்.

மேலும் தே.மு.தி.க. போட்டியிடும் 4 தொகுதிகளில் அவர் 2 நாட்கள் முகாமிட்டு பிரசாரம் செய்கிறார். சட்டசபை தொகுதி வாரியாக அவர் பிரசாரம் செய்ய உள்ளார். இறுதியில் தனது சகோதரர் சுதீஷ் போட்டியிடும் கள்ளக்குறிச்சி தொகுதியில் பிரசாரத்தை முடிக்க திட்டமிட்டுள்ளார்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்பி தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். முன்பைபோல அவர் தேர்தல் பிரசாரம் செய்ய முடியாது என்பதால் ஏதாவது ஒரு இடத்தில் மட்டும் பிரசாரம் செய்ய அவர் திட்டமிட்டுள்ளார்.

விஜயகாந்த் பிரசாரத்துக்கு மட்டுமே வருவார். ஆனால் பேச மாட்டார் என்று ஏற்கனவே எல்.கே.சுதீஷ் தெரிவித்துள்ளார். எனவே விஜயகாந்துக்கு பதிலாக அவரது மனைவி பிரேமலதா தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்கிறார்.  #LSPolls #DMDK #PremalathaVijayakanth
Tags:    

Similar News