அ.தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் தொய்வு - இ.பி.எஸ். ஆதங்கம்
- ஒவ்வொரு குடும்பத்துக்கும் கருணைத் தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.
- வரும் நாட்களில் மாவட்ட செயலாளர்கள் அனைவரையும் தனித்தனியாக அழைத்து பேச இருப்பதாக தெரிவித்துள்ளார்.
சென்னை:
சட்டமன்ற தேர்தல் தொடர்பான அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்ற சூழலில், ஒவ்வொரு கட்சிகளும் தேர்தல் பணிகளில் படு 'பிசி'யாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார்.
இதில் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், துணை பொதுச் செயலாளர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி, முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, டி.ஜெயக்குமார், காமராஜ், ஓ.எஸ்.மணியன் மற்றும் மாவட்ட செயலாளர்கள் பலர் கலந்து கொண்டனர். மாலை 4 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டம் 5 மணி வரை அதாவது சுமார் ஒரு மணி நேரம் நடந்தது.
கூட்டத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் அடிப்படையில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதிலும் சமீப நாட்களாக எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் அனைத்து குடும்ப தலைவிக்கும் மாதம் ரூ.2,000 உதவித் தொகை, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் 3 கியாஸ் சிலிண்டர், ஒவ்வொரு குடும்பத்துக்கும் கருணைத் தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
அவ்வாறு வெளியிடக்கூடிய அறிவிப்புகளை இதுவரை வீடு வீடாக மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கப்படவில்லை என்றும், அதனை மக்கள் மத்தியில் கொண்டுபோய் சேர்த்தால்தான் அ.தி.மு.க.வின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் என்றும், அந்த பணிகளில் மாவட்ட செயலாளர்களிடம் தொய்வு இருக்கிறது என்றும் ஆதங்கத்தோடு பேசியுள்ளார்.
மேலும் வரும் நாட்களில் மாவட்ட செயலாளர்கள் அனைவரையும் தனித்தனியாக அழைத்து பேச இருப்பதாகவும் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
இதுதவிர, வருகிற 11-ந்தேதி (புதன்கிழமை) திருச்சியில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்க இருக்கும் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த வேண்டும், திருச்சியை சுற்றியுள்ள மாவட்ட தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்க வேண்டும் எனவும், பா.ஜ.க. அமைப்பு ரீதியாக உற்சாகமாக இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள். ஆனால் நாம் அமைப்பு ரீதியாக அப்படி வருவதில்லை எனவும் மாவட்ட செயலாளர்களிடம் கூறினார்.