ஊ.மங்கலம் அருகே விபத்து - மாணவன் பலி
நெய்வேலி:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சக்திநகர் பகுதியை சேர்ந்தவர் அப்துல் மோசின் (வயது 14). இவன் விருத்தாசலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்தநிலையில் நேற்று இரவு அப்துல்மோசின் அவரது உறவினர் பாலமுருகன் (28) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் விருத்தாசலத்தில் இருந்து வடலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது நெய்வேலி அருகே உள்ள ஊ.மங்கலம் என்ற இடத்தில் மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்தது.
அப்போது அந்த வழியாக வந்த கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி பாலமுருகன் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட அப்துல்மோசின் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். பாலமுருகன் படுகாயம் அடைந்தார்.
உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பாலமுருகனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து ஊ.மங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெய்ஹிந்த்தேவி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.