செய்திகள்

அ.தி.மு.க.வுடன் தொடர்ந்து பேசி வருகிறோம்- ஜிகே வாசன்

Published On 2019-03-12 14:23 IST   |   Update On 2019-03-12 14:59:00 IST
பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க.வுடன் பேசி வருவதாகவும் அவர்களின் முடிவை பொறுத்து கூட்டணி அறிவிப்பை வெளியிடுவதாகவும் ஜி.கே.வாசன் தெரிவித்தார். #LSPolls #GKVasan #ADMKAlliance
சென்னை:

த.மா.கா. நிர்வாகிகளின் அவசர ஆலோசனை கூட்டத்தை ஜி.கே.வாசன் இன்று கூட்டியுள்ளார். மாநில துணை தலைவர்கள் விடியல் சேகர் பொதுச்செயலாளர் ஞானசேகரன், செயலாளர்கள் எம்.டி.எஸ்.சார்லஸ், சக்திவேல், ரெங்கராஜன், தலைமை நிலைய செயலாளர்கள் ஜி.ஆர்.வெங்கடேஷ், டி.என்.அசோகன், டி.எம்.பிரபாகர், மாவட்ட தலைவர்கள் கொட்டிவாக்கம் முருகன், சைதை மனோகரன், பிஜி சாக்கோ, அண்ணா நகர் ராம்முகர், அருண் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

அப்போது நிர்வாகிகள் தரப்பில் நமது கட்சிக்கு என்று தனியாக குறிப்பிட்ட அளவு செல்வாக்கு இருக்கிறது. எனவே 2 தொகுதிக்கும் குறைவாக தொகுதிகள் ஒதுக்கப்பட்டால் கூட்டணி வேண்டாம் அதற்கு பதிலாக இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் நாமும் தனித்து போட்டியிடலாம் என்ற கருத்தை சிலர் முன்வைத்தனர்.

இன்னும் சிலர் கூறும் போது, ‘‘நாம் காங்கிரஸ் பாரம்பரியத்தில் இருந்து வந்தவர்கள். அப்படியிருந்தும் கூட்டணிக்காக பா.ஜனதாவை ஆதரிக்கும் அளவுக்கு இறங்கி இருக்கிறோம். எனவே அவர்கள் தான் நமக்கு கூடுதலாக தொகுதிகளை தர வேண்டும்’’ என்றனர்.

சிலர் பேச்சுவார்த்தையின் நிலவரங்கள் பற்றி கேள்வி எழுப்பினர். அவர்கள் மத்தியில் ஜி.கே.வாசன் பேசும்போது, ‘‘உங்கள் உணர்வுகளும், ஆதங்கமும் எனக்கு புரிகிறது.



அ.தி.மு.க. தரப்பில் இருந்து என்னிடம் நேரடியாக தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள். எனவே நிர்வாகிகள் வேறு எந்த மாறுபாடான எண்ணங்களுக்கும் இடம் கொடுக்க வேண்டாம்’’ என்று கேட்டுக்கொண்டார்.

பின்னர் ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடர்பாக பேசி வருகிறோம். எங்கள் நிலைப்பாட்டை அவர்களிடம் தெரிவித்து இருக்கிறோம். அவர்கள் முடிவை பொறுத்து முடிவு செய்யப்படும். இன்னும் ஓரிரு நாட்களில் எங்கள் முடிவு அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். #LSPolls #TamilMaanilaCongress #GKVasan #ADMKAlliance
Tags:    

Similar News

வடம்- Movie Review