அ.தி.மு.க.-பா.ம.க.வுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்-தினகரன் பேச்சு
நெய்வேலி:
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. கடலூர் மாவட்டத்தில் நேற்று மாலை 2-வது நாளாக மக்கள் சந்திப்பு பயணம் மேற்கொண்டார்.
குறிஞ்சிப்பாடி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட சத்திரத்தில் இருந்து அவர் தனது பயணத்தை தொடங்கினார். முத்தாண்டிகுப்பம் கடைவீதி, நெய்வேலி புதுநகர் மெயின் பஜார், வடலூர் ஆகிய இடங்களுக்கு சென்றார். அப்போது அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் திறந்த வேனில் நின்றபடி பேசினார்.
அ.தி.மு.க. கூட்டணியில் பாரதீய ஜனதா, பாட்டாளி மக்கள் கட்சி இணைந்துள்ளது. பா.ம.க. இணைந்தது கேள்விக்குறியான செய்தியாக உள்ளது. பா.ம.க. இனிமேல் திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டோம் என கூறியிருந்தனர். ஆனால் வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துள்ளது.
அ.தி.மு.க. தலைமையிலான இந்த கூட்டணி ஒரு சந்தர்ப்பவாத கூட்டணியாகும். இந்த கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். அ.தி.மு.க. அரசு மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டது. மக்கள் நம்பிக்கையை இழந்த இந்த அரசை இனிமேலும் தொடரவிடக்கூடாது. எனவே மக்கள் பொறுத்திருந்தது போதும்.
எனவே உங்களுடைய பொன்னான வாக்குகளை அளித்து எங்களை வெற்றி பெற செய்யவேண்டும். தமிழர்கள் தான் இனிமேல் பாராளுமன்றத்தில் தலைநிமிர்ந்து நிற்கவேண்டும். பாரத பிரதமரை தேர்ந்தெடுக்கும் முழு உரிமை தமிழர்களுக்கு மட்டுமே தரக்கூடிய எங்கள் அணிக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும்.
நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு மக்கள் என்னிடம் பலகுறைகளை கூறினார்கள். அதில் மிக முக்கியமாக நடந்து முடிந்த ஊதிய மாற்று ஒப்பந்தம் மூலம் நெய்வேலி என்.எல்.சி. தொழிலாளர்களுக்கு தரவேண்டிய புதிய ஊதியத்தை காலம் தாழ்த்தி வருவது தெரியவந்தது.
இதில் மத்திய நிலக்கரி துறை மந்திரி உடனடியாக கவன ஈர்ப்பு கொண்டு வந்து தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய புதிய ஊதிய மாற்று ஒப்பந்த தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
மேலும் வீடு, நிலம் இழந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு உரிய சம்பளம் வழங்க வேண்டும்
ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும். தமிழ்நாட்டை சேர்ந்த படித்த இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். #dinakaran #pmk #admk