வேகமாக குறைந்து வரும் பெரியாறு-வைகை அணை
கூடலூர்:
தென் மேற்கு பருவமழை கைகொடுத்ததால் முல்லைப் பெரியாறு உள்ளிட்ட அணைகளின் நீர் மட்டம் உயர்ந்தது. இதனால் விவசாயிகள் விவசாய பணிகளில் மும்முரமாக ஈடுபட்டனர். மேலும் 4 ஆண்டுகளுக்கு பிறகு கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இருபோக நெல் சாகுபடியில் விவசாயிகள் ஈடபட்டு வருகின்றனர்.
ஆனால் வடகிழக்கு பருவமழை ஏமாற்றியதால் முல்லைப் பெரியாறு, வைகை அணைகளுக்கு நீர் வரத்து அடியோடு நின்றுள்ளது. இதனால் அணைகளின் நீர் மட்டமும் வேகமாக குறையத் தொடங்கியுள்ளது.
முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டம் 117.85 அடியாக உள்ளது. வரத்து இல்லை. 300 கன அடி நீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர் மட்டம் 54 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 60 கன அடி நீர் மதுரை மாநகர குடிநீருக்காக திறந்து விடப்படுகிறது.
மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 43.85 அடியாக உள்ளது. வரத்து இல்லை. 60 கன அடி நீர் திறக்கப்படுகிறது சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 93.97 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
அணைகளின் நீர் மட்டம் வேகமாக குறைந்து வருவதால் தேனி, மதுரை மாவட்ட குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
தற்போது உள்ள நீரை கொண்டு அடுத்த 3 மாதத்துக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்யலாம். அதனைத் தொடர்ந்துமழை பெய்தால் மட்டுமே சமாளிக்க முடியும். இல்லையென்றால் கோடை காலத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.