தமிழ்நாடு செய்திகள்

முல்லை பெரியாறு அணையில் ரிமோட் நீர்மூழ்கி மூலம் ஆய்வு- நாளை முதல் 12 நாட்கள் நடக்கிறது

Published On 2025-12-21 14:08 IST   |   Update On 2025-12-21 14:08:00 IST
  • நீர்மட்டத்தை 142 அடியில் இருந்து 136 அடியாக குறைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
  • கடந்த 2011ம் ஆண்டு ரிமோட் மூலம் இயக்கப்படும் ஆர்.ஓ.வி. நீர்மூழ்கி கலத்தை பயன்படுத்தி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

கூடலூர்:

கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணை மூலம் தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. பாசனத்திற்கு போக வைகை அணைக்கு செல்லும் நீர் மூலம் மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி ஆகிய 5 மாவட்டங்களில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் விவசாய பணிகள் நடைபெற்று வருகிறது.

999 ஆண்டு கால குத்தகை ஒப்பந்தத்தின் அடிப்படையில் அணையின் மேலாண்மை, நீர் பயன்படுத்தும் உரிமை, நீர்திறப்பு மற்றும் பராமரிப்பு ஆகியவற்றை தமிழக பொதுப்பணித்துறை செய்து வருகிறது.

இந்த நிலையில் முல்லை பெரியாறு அணை பலவீனமாக உள்ளது என கேரள அரசு மற்றும் சில தன்னார்வ அமைப்புகள் வதந்தியை கிளப்பி வருகின்றனர். கடந்த 2014ம் ஆண்டு உச்சநீதிமன்றம் பேபி அணையை பலப்படுத்திவிட்டு அணையில் 152 அடிவரை தண்ணீர் தேக்கி கொள்ளலாம் என உத்தரவிட்டது. ஆனால் கேரள அரசு தமிழக அதிகாரிகள் பராமரிப்பு பணி மேற்கொள்ள தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது. மேலும் நீர்மட்டத்தை 142 அடியில் இருந்து 136 அடியாக குறைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

கடந்த 2011ம் ஆண்டு ரிமோட் மூலம் இயக்கப்படும் ஆர்.ஓ.வி. நீர்மூழ்கி கலத்தை பயன்படுத்தி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அணை பலமாக உள்ளது. அச்சப்பட தேவையில்லை என உத்தரவிட்டு பல்வேறு வழிகளை வழங்கி வருகின்றனர். கடந்த நவம்பர் 10ம் தேதி அணையை மத்திய கண்காணிப்பு குழு ஆய்வு செய்தது. பின்னர் மதுரையில் நடத்திய ஆய்வு மற்றும் ஆலோசனை கூட்டத்தில் நவீன ஆர்.ஓ.வி. மூலம் ஆய்வு நடத்த இரு மாநில அதிகாரிகள் ஒப்புதலோடு முடிவு எடுக்கப்பட்டது.

தரைக்கு மேல் இருந்து இயக்கப்படும் இந்த கருவி மூலம் அணைக்கு அடியில் நீரில் மூழ்கியுள்ள சுவர்கள், தடுப்புகள், கழிவுநீர் வெளியேற்றம் ஆகியவற்றை ஆராயலாம். மேலும் ஆழமான அபாயகரமான பகுதிகளில் கருவிகள் பொருத்தப்பட்ட காமிராக்கள் மூலம் முப்பரிமாண வீடியோ மற்றும் படங்களை பதிவு செய்து கொள்ளலாம. 14 ஆண்டுகளுக்கு பின்னர் 2வது முறையாக ஆய்வு நடத்துவதற்காக ஜல்சக்தி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் டெல்லியில் உள்ள மத்திய மண் மற்றும் பொருட்கள் ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஆர்.ஓ.வி. நீர் மூழ்கி கலம் வரவழைக்கப்பட்டு தமிழக பொதுப்பணித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் ஆய்வுக்காக சுமார் 7 பேர் கொண்ட வல்லுனர் குழுவுடன் துறை அதிகாரிகள், இரு மாநில அதிகாரிகள் முன்னிலையில் நாளை முதல் அணையின் 250 மீட்டர் நீருக்கு அடியில் அணையின் உட்புறம், முன்புறப்பகுதிகளில் ஆய்வு நடைபெற உள்ளது. தினசரி 20 மீட்டர் மட்டுமே ஆய்வு செய்ய முடியும் என்பதால் 12 நாட்கள் வரை ஆய்வு நடபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News