செய்திகள்
கொலையுண்ட பிரேம்குமார்

திருமங்கலம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் படுகொலை

Published On 2018-12-03 11:47 GMT   |   Update On 2018-12-03 11:47 GMT
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேரையூர்:

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கூத்தியார்குண்டு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிப்பவர் மீனாட்சிசுந்தரம். இவரது மனைவி அமுதா. இவர்களது மகன் பிரேம்குமார் (வயது28), லேத் பட்டறை நடத்தி வந்தார்.

கடந்த ஓராண்டுக்கு முன்பு பிரேம்குமாருக்கு திருமணம் நடைபெற்ற நிலையில் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

பிரேம்குமாரின் வீட்டில் அவரது தாய்மாமன் மகன் பிரகாஷ் (34) தனது மனைவி சூர்யாவுடன் வசித்து வந்தார். ஒரே வீட்டில் இருந்ததால் பிரேம்குமாரும், சூர்யாவும் அடிக்கடி சந்திக்க நேர்ந்தது. நாளடைவில் இருவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது.

இது தெரியவந்ததும் இருவரையும் குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். பிரகாஷ் 3 மாதத்துக்கு முன்பு மனைவியுடன் அங்கிருந்து வெளியேறி கருப்பாயூரணி சென்று விட்டார். ஆனால் அதன் பிறகும் சூர்யாவுடன் பிரேம்குமார் தொடர்பு வைத்துள்ளார்.

இதனால் பிரகாஷ் ஆத்திரம் அடைந்தார். பிரேம்குமாரின் சகோதரரை சந்தித்து எச்சரித்துள்ளார். இந்த நிலையில் பிரகாஷ் சகோதரர் பாலனுடன் இன்று காலை கூத்தியார்குண்டு வந்தார்.

பிரேம்குமார் வீட்டின் சுவர் ஏறிக்குதித்து அவர்கள் உள்ளே சென்றனர். வீட்டின் மாடிக்கு சென்ற 2 பேரும், அங்கு படுத்திருந்த பிரேம் குமாரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் அவர் படுக்கையிலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

மகனின் அலறல் சத்தம் கேட்டு வந்த அமுதாவை ஒரு அறையில் தள்ளி அடைத்து விட்டு பிரகாசும், அவரது சகோதரரும் தப்பிச் சென்று விட்டனர்.

தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று பிரேம் குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தப்பி ஓடிய பிரகாஷ் மற்றும் அவரது சகோதரரை தேடி வருகின்றனர். 
Tags:    

Similar News