செய்திகள்

கரூர் அருகே பள்ளி பஸ் சக்கரத்தில் சிக்கி சிறுவன் பலி

Published On 2018-11-27 10:10 GMT   |   Update On 2018-11-27 10:10 GMT
கரூர் அருகே இன்று காலை பள்ளி பஸ் சக்கரத்தில் சிக்கி 2 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர்:

கரூர் வாங்கல் சங்கரம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் பரணிதா(வயது5), மகன் பிரவீன் (2). பரணிதா அங்குள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறாள்.

வீட்டின் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் இருந்து பரணிதா தினமும் பள்ளி பஸ்சில் ஏறி செல்வது வழக்கம். அப்போது பரணிதாவை அவரது தாய் விட்டு செல்வார். அது போல் இன்று காலை பள்ளி பஸ்சில் ஏற்றி விடுவதற்காக பரணிதாவை அவரது தாய் அழைத்து சென்றார்.

பள்ளி பஸ் வந்ததும் மகளை ஏற்றி விட்டு வீட்டிற்கு திரும்பினார். அதற்கு முன்பு பிரவீன், தனது தாயின் பின்னால் ஓடியுள்ளான். இதனை யாரும் கவனிக்கவில்லை.

இந்தநிலையில் பரணிதாவை ஏற்றி விட்டு திரும்பும் போது, அங்கு வந்த பிரவீன் பஸ் முன்பு சென்றுவிட்டான். டிரைவர் இதை கவனிக்காமல் பஸ்சை இயக்கவே, முன்பக்க சக்கரத்தில் சிக்கி பிரவீன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இதைப்பார்த்த அவனது தாய் கதறி துடித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News