செய்திகள்

நாகையில் 4 நாட்களாக உணவு கிடைக்கவில்லை - 26 இடங்களில் மக்கள் மறியல் போராட்டம்

Published On 2018-11-19 06:29 GMT   |   Update On 2018-11-19 06:32 GMT
நாகை மாவட்டத்தில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதி செய்யாததால் 26 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். #Gajastorm #Storm

நாகப்பட்டினம்:

கஜா புயலால் நாகை மாவட்டம் கடும் பேரழிவை சந்தித்துள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு மரங்கள், வீடுகள் சேதம் அடைந்துள்ளன. மீனவர்களின் படகுகளும் சேதம் அடைந்துள்ளன. இதனால் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

பல கிராமங்களில் மக்கள் அடிப்படை வசதி செய்து கொடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். சாலையில் விழுந்த மரங்களை கூட அதிகாரிகள் வெட்டி அப்புறப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறுகிறார்கள். பல கிராமங்களில் கிராம மக்களே வெட்டி அப்புறப்படுத்தி உள்ளனர்.

மேலும் புயல் பாதிப்பினால் மின்சாரமும் கடந்த 4 நாட்களாக இல்லாததால் கிராமங்கள் இருளில் மூழ்கி உள்ளன. இதனால் உணவு, குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். மேலும் வீடுகள் சேதம் அடைந்துள்ளதாலும் அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் மக்கள் நிர்கதியாக உள்ளனர்.

இதனால் பல கிராமங்களில் மக்கள் உணவு, குடிநீர் உள்ளிட்ட வசதி இல்லாதால் ஆத்திரம் அடைந்து சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று ஒரே நாளில் நாகை மாவட்டத்தில் 26 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகை அருகே உள்ள பூவைத்தேடி, கண்ணித்தோப்பு, காமேஸ்வரம், ஈசனூர், ஆலங்குடி, ஓடாச்சேரி, மணக்குடி, முதலியப்பன்கண்டி, தாதன்திருவாசல், வேட்டைக்காரனிருப்பு, கரியாப்பட்டினம் உள்ளிட்ட 26 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை போலீசார் மற்றும் அதிகாரிகள் சமரசம் செய்தனர்.

இதேபோல் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், மன்னார்குடி, திருத் துறைப்பூண்டி பகுதிகளிலும் மக்கள் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். #Gajastorm #Storm

Tags:    

Similar News