செய்திகள்

திட்டக்குடி அருகே 3 வீடுகளில் பல லட்சம் நகை-பணம் கொள்ளை

Published On 2018-11-12 12:44 GMT   |   Update On 2018-11-12 12:44 GMT
திட்டக்குடி அருகே அடுத்தடுத்து 3 வீடுகளில் பல லட்சம் நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பெண்ணாடம்:

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள டி.ஏந்தல் கிராமத்தை சேர்ந்தவர் கந்தசாமி(வயது 65). இவரது மகன்கள் வெங்கடேசன், முருகேசன் மற்றும் அழகேசன். இவர்கள் 3 பேரும் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகின்றனர்.

இதனால் இவர்கள் 3 பேரின் மனைவி மற்றும் குழந்தைகள் டி.ஏந்தலில் அடுத்தடுத்து உள்ள 3 வீடுகளில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று அவர்கள் அனைவரும் அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டனர். வீட்டில் கந்தசாமி மட்டும் தனியாக இருந்தார். இரவு அவர் வீட்டின் வெளியே வராண்டாவில் படுத்து தூங்கி கொண்டிருந்தார்.

இதைநோட்டமிட்ட மர்மமனிதர்கள் அங்கு வந்தனர். அவர்கள் வெங்கடேசன் வீட்டில் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த வெள்ளிப்பொருட்கள் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்தனர்.

பின்னர் அவரது வீட்டின் அருகே உள்ள முருகேசன் மற்றும் அழகேசன் ஆகியோரின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். வீட்டில் இருந்த பீரோக்களை திறந்து நகை மற்றும் பணத்தையும் கொள்ளையடித்தார்கள். இதையடுத்து கொள்ளையடித்த பொருட்களை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

கொள்ளைபோன நகை மற்றும் பணத்தின் மதிப்பு பல லட்சம் இருக்கும் என தெரிகிறது. இன்று காலை 3 வீடுகளின் கதவை உடைக்கப்பட்டிருப்பதை கண்டு கந்தசாமி அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறிக்கிடந்தன. மர்ம மனிதர்கள் உள்ளே புகுந்து கொள்ளையடித்தது தெரியவந்தது.

இதுகுறித்து அவர் ராமநத்தம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கொள்ளை நடந்த 3 வீடுகளையும் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வீட்டில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

அடுத்தடுத்து 3 வீடுகளில் கொள்ளை நடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News