இந்தியா

எதிர்க்கட்சியினரை பேச அனுமதிக்கக்கூடாது என மோடி அரசு முடிவு செய்துவிட்டது - மல்லிகார்ஜூன கார்கே

Published On 2026-02-05 17:58 IST   |   Update On 2026-02-05 18:01:00 IST
  • இதை பாஜக எப்போதாவது கண்டித்திருக்கிறதா?
  • போராட்டம் நடத்த வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம்.

மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மோடி அரசாங்கம் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

அவையில் எதிர்க்கட்சிகளை பேச அனுமதிக்காதது குறித்து பேசிய மல்லிகார்ஜூன கார்கே, "எதிர்க்கட்சித் தலைவர்களை பேச அனுமதிக்கக் கூடாது என்று மோடி அரசாங்கம் முடிவு செய்துவிட்டது. மக்களவையிலும் சரி, மாநிலங்களவையிலும் சரி, இருவரையும் பேச அனுமதிப்பதில்லை."

"இந்த நாட்டிற்காக தியாகம் செய்த, இந்த நாட்டிற்காக போராடிய, சிறை சென்று நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுத் தருவதற்காக ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடிய நமது மாபெரும் தலைவர்களுக்கு எதிராக, ஒரு மனிதர் அவையில் பேசுகிறார். அவருக்கு மைக் கொடுக்கப்படுகிறது, அவர் அந்த மைக்கில் இஷ்டம்போல் அவதூறுகளை பொழிகிறார், அரசாங்கமோ மௌனமாக இருக்கிறது. இதை பாஜக எப்போதாவது கண்டித்திருக்கிறதா?"

"அதனால்தான், எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் அனைவரும், எங்களை பேச அனுமதிக்கவில்லை என்றால், நாங்கள் வெளிநடப்பு செய்ய வேண்டும், நாங்கள் போராட்டம் நடத்த வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம். குறிப்பாக, நமது தலைவர்களுக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பை, நாங்கள் கண்டிக்கிறோம்," என்றார்.

Tags:    

Similar News