செய்திகள்
திருவேங்கடம், பரிமளா, நிகில்

இறந்து போன மகனின் பிறந்த நாளில் குழந்தையை கொன்று கணவன்-மனைவி தற்கொலை

Published On 2018-10-19 10:48 GMT   |   Update On 2018-10-19 10:48 GMT
குடியாத்தம் அருகே இறந்து போன மகன் பிறந்த நாளில் அவனது பெற்றோர், தம்பி தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
குடியாத்தம்:

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள அம்மனாங்குப்பம் பழைய காலனியை சேர்ந்தவர் திருவேங்கடம் (வயது 42). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி பரிமளா (34). தம்பதிக்கு நிகேஷ் (7), நிகில் (3) என்ற 2 மகன்கள். இதில் நிகேஷ் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திடீரென உடல்நலம் பாதிக்கபட்டு இறந்தார்.

நிகேஷ் இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் திருவேங்கடம் பரிமளா தவித்தனர். அவர்கள் வீட்டுக்குள்ளே முடங்கினர். நேற்று இறந்து போன நிகேஷ் பிறந்த நாளாகும். இதனால் தம்பதியினர் காலையில் சுறுசுறுப்பாக இருந்தனர்.

வீட்டில் கேக் வெட்டி நிகேஷ் பிறந்த நாளை கொண்டாடினர். பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு இறந்து போன மகன் பிறந்த நாளை நினைவு கூறி இனிப்பு, கேக் வழங்கினர்.

நாள் முழுவதும் மகனின் நினைவுகளில் மூழ்கி கிடந்த அவர்களால் மகனை மறக்க முடியவில்லை. இதனால் தற்கொலை செய்ய முடிவு செய்தனர். தங்களது 3 வயது மகன் நிகிஷை தூக்கில் தொங்கவிட்டு திருவேங்கடம், பரிமளா ஆகியோர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

இன்று காலை நீண்ட நேரமாகியும் அவர்கள் வீட்டு கதவு திறக்கவில்லை. சந்தேகமடைந்த உறவினர்கள் வீட்டுக்குள் சென்றபோது 3 பேரும் தூக்கில் பிணமாக தொங்கினர். இதை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் இருதயராஜ் மற்றும் போலீசார் அங்கு சென்று 3 பேரும் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News