செய்திகள்

மாணவர்கள் மீது தடியடி நடத்திய போலீசார் மீது நடவடிக்கை- வைகோ வலியுறுத்தல்

Published On 2018-10-10 09:51 GMT   |   Update On 2018-10-10 09:51 GMT
நெல்லை பல்கலைக் கழக மாணவர்கள் மீது தடியடி நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார். #MDMK #Vaiko
சென்னை:

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தியும், பல்கலைக்கழக நிர்வாகம் உடனடியாக மாணவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்திட முன் வரவில்லை.

இதனைக் கண்டித்து மாணவர்கள் தீவிர முழக்கங்கள் எழுப்பிய பின்னரே, மாணவப் பிரதிநிதிகள் ஓரிருவரை மட்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளனர்.

முற்றுகையிட்ட மாணவர்கள் பல்கலைக் கழகத்திற்குள் நுழைய முற்பட்ட போது அவர்களை சமாதானப்படுத்த முயலாமல், காவல் துறையினர் கண் மூடித்தனமாக தடியடி நடத்தியுள்ளனர்.

இந்தத் தாக்குதலில் மாணவ- மாணவியர் பலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவியர் சிலரை காவல்துறையைச் சேர்ந்த பெண் காவலர்களே முரட்டுத்தனமாக அடித்துத் தள்ளுகின்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. போர்க்களம் போல் நேற்று நடந்த இந்தக் காட்சிகளைப் பார்க்கும்போது மிகுந்த மன வேதனையைத் தருகிறது.

மாணவர்கள் மீது காவல் துறையினர் கடுமையான தாக்குதலில் ஈடுபட்டதை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

மாணவர்களின் உரிமைப் போராட்டத்தில் மிக மெத்தனமாகச் செயல்பட்ட பல்கலைக்கழக அதிகாரிகள் மற்றும் மாணவர்கள் மீது தடியடி நடத்திய காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

அமைதியான முறையில் போராடும் மாணவர்கள் மீது அரக்கத்தனமான தாக்குதல் தொடருமேயானால், எதிர் விளைவுகள் ஏற்படும் என்பதை உணரவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #MDMK #Vaiko
Tags:    

Similar News