செய்திகள்

கச்சத்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு - இலங்கை கடற்படையினர் தாக்குதல்

Published On 2018-09-30 05:02 GMT   |   Update On 2018-09-30 05:02 GMT
நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் மீனவர்களை விரட்டியடித்தனர். இதனால் மீனவர்கள் அச்சத்துடன் கரை திரும்பினர்.

ராமேசுவரம்:

தமிழக மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கும்போது இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது வாடிக்கையாக நடந்து வருகிறது. கடந்த சில நாட்களாக இந்த தாக்குதல் அதிகரித்துள்ளது.

நேற்று ராமேசுவரத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 600 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

அவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு 7 குட்டி ரோந்து கப்பல்களில் இலங்கை கடற் படையினர் வந்தனர்.

அவர்கள் தங்கள் படகை, விசைப்படகுகளின் மீது மோதுவது போல் வந்ததால் மீனவர்கள் அச்சம் அடைந்தனர். இங்கு மீன்பிடிக்கக்கூடாது என எச்சரித்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை அங்கிருந்து விரட்டியடித்தனர்.

இதனைத் தொடர்ந்து மீனவர்கள் அவசரம் அவசரமாக புறப்பட்டனர். அப்போது அவர்களது வலைகளை இலங்கை கடற்படையினர் அறுத்து எறிந்து சேதப்படுத்தனர். இதனால் மீனவர்கள் அச்சத்துடன் கரை திரும்பினர். அவர்கள் கூறுகையில், கடந்த ஒரு வாரத்தில் இது 2-வது தாக்குதல் ஆகும்.

இதனால் எங்கள் வாழ் வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மீன்பிடிக்க முடியாத நிலையிலும் வலை உள்ளிட்ட உடமைகளும் சேதப்படுத்தப்பட்டதால் நாங்கள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகி உள்ளோம் என்றனர்.

Tags:    

Similar News