செய்திகள்
ஒச்சம்மாள்

மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ தாயார் மரணம் - நாளை மதியம் உடல் தகனம்

Published On 2018-08-30 09:56 GMT   |   Update On 2018-08-30 09:56 GMT
அமைச்சர் செல்லூர் ராஜூவின் தாயார் இன்று காலை மரணம் அடைந்தார். அவரது உடல் தகனம் நாளை மதியம் நடக்கிறது. #MinisterSellurRaju
மதுரை:

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர், மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் செல்லூர் ராஜூ. அவரது தாயார் ஒச்சம்மாள் (வயது 90).

கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் ஒச்சம்மாள் சிகிச்சை பெற்று வந்தார்.

சில நாட்களாக அவரது உடல் நிலையில் தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டது. ஆனாலும் டாக்டர் குழுவினர் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து சிகிச்சை அளித்தனர்.

இந்த நிலையில் இன்று காலை 9 மணியளவில் ஒச்சம்மாள் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் ஆஸ்பத்திரியில் இருந்து மதுரை செல்லூரில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு சிறிது நேரத்தில் அவர் மரணம் அடைந்தார்.

தாயார் மரணம் அடைந்ததை அறிந்து அமைச்சர் செல்லூர் ராஜூ, அவரது மனைவி ஜெயந்தி ராஜூ மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர்.

ஒச்சம்மாளின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

ஒச்சம்மாளின் உடல் தகனம் நாளை (வெள்ளிக்கிழமை) மதியம் 1 மணிக்கு நடக்கிறது. செல்லூரில் உள்ள இல்லத்தில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு தத்தனேரியில் தகனம் செய்யப்படுகிறது.

அமைச்சர் செல்லூர் ராஜூவின் தாயார் மறைவையொட்டி அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் செல்லூர் ராஜூவுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

நாளை நடைபெறும் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள். #MinisterSellurRaju

Tags:    

Similar News