புரோ கபடி லீக் - இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், புனேரி பால்டன்
- புரோ கபடி லீக் அரையிறுதியில் தமிழ் தலைவாஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் புனேரி பால்டன் அணி வென்றது.
- முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறிய தமிழ் தலைவாஸ் அணியின் கோப்பையை வெல்லும் கனவு தகர்ந்தது.
மும்பை:
9-வது புரோ கபடி லீக் போட்டி மும்பையில் நடந்து வருகிறது. இதில் நேற்று 2 அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.
இரவு 7.30 மணிக்கு நடந்த முதலாவது அரையிறுதியில் முன்னாள் சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின. அபாரமாக ஆடிய ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 49-29 என்ற கணக்கில் பெங்களூரு புல்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இதேபோல், இரவு 8.30 மணிக்கு நடைபெற்ற 2-வது அரையிறுதியில் அஜிங்யா பவார் தலைமையிலான தமிழ் தலைவாஸ் அணி, பாசெல் அட்ராசலி தலைமையிலான புனேரி பால்டனை எதிர்கொண்டது. பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் புனேரி பால்டன் அணியிடம் 39-37 என்ற புள்ளிக் கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி தோல்வியடைந்தது.
வரும் 17-ம் தேதி (சனிக்கிழமை) நடக்கும் மகுடத்திற்கான இறுதிப்போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியுடன், புனேரி பால்டன் அணி மோதுகிறது.