வங்கதேசத்திடம் கூறியதுபோல் ஐசிசி இந்தியாவிடம் கூறுமா? - நாசர் ஹுசைன் நறுக் கேள்வி!
- வங்கதேசம், பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகள் ஒரே மாதிரியாக நடத்தப்பட வேண்டும்.
- திகாரத்துடன் பொறுப்பும் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
பாகிஸ்தான், 2026 டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடுவோம் என்றும் ஆனால் பிப்.15-ல் கொழும்பில் நடைபெறும் இந்தியாவிற்கு எதிரான போட்டியை மட்டும் புறக்கணிப்போம் என்றும் தெரிவித்துள்ளது.
மறுபக்கம் இந்தியா பாகிஸ்தான் உடன் விளையாட தயாராக இருக்கிறது என அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். இந்நிலையில் வங்கதேசத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக பாகிஸ்தான் எடுத்துள்ள இந்த நிலைப்பாட்டிற்கு, இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பான நாசர் ஹுசைனின் கருத்துகள் கவனம் ஈர்த்ததோடு மட்டுமல்லாமல் பல வசைபாடல்களுக்கும் உள்ளாகி வருகிறது.
பாகிஸ்தான் நிலைப்பாடு தொடர்பாக பேசியுள்ள நாசர் ஹுசைன்,
"இதுவே இந்தியா, தொடர் தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு, 'எங்கள் அரசு இந்த நாட்டில் விளையாட அனுமதிக்கவில்லை' என்று கூறியிருந்தால், ஐசிசி அதே உறுதியோடு, 'விதிகள் உங்களுக்கு தெரியும். மீறினால் தொடரில் இருந்து நீக்குவோம்' என சொல்லியிருக்குமா?. அனைத்து தரப்பினரும் கேட்பது நிலைத்தன்மைதான். வங்கதேசம், பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகள் ஒரே மாதிரியாக நடத்தப்பட வேண்டும்.
இந்திய ரசிகர்கள் கூறலாம், 'இன்னும் நல்லா அழுங்க, எங்களிடம் பணம் இருக்கிறது' என்று. ஆனால் அதிகாரத்துடன் பொறுப்பும் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானை தொடர்ந்து குறைமதிப்பீடு செய்வது அவர்களின் கிரிக்கெட்டை பாதிக்கிறது. அதனால்தான் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் அல்லது இந்தியாவுக்கும் வங்கதேசத்திற்கும் இடையிலான சிறந்த போட்டிகள் காலப்போக்கில் ஒருதலைப்பட்சமானவையாக மாறிவிட்டன." என தெரிவித்துள்ளார்.
மேலும் கிரிக்கெட்டில் அரசியல் தலையீடு அதிகரித்து வருவது கவலையளிப்பதாகவும், இது கிரிக்கெட்டின் தரத்தைக் குறைத்துவிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இவரின் இந்த கருத்துக்கு இந்திய ரசிகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து, இவரை ட்ரோல் செய்துவருகின்றனர்.