வாஷிங்டன் சுந்தரை சிஎஸ்கேவுக்கு விட்டுக் கொடுக்கிறதா குஜராத் அணி? - வெளியான புதிய தகவல்
- ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் மாதம் 2-வது வாரத்தில் நடக்கவுள்ளது.
- சிஎஸ்கே அணிக்காக ஆடி வந்த அஸ்வின் ஓய்வை அறிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் மாதம் 2-வது வாரத்தில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அனைத்து அணிகளும் தங்கள் வீரர்களை தக்கவைப்பது மற்றும் விடுவிப்பது குறித்த தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில் சிஎஸ்கே அணியும் ஆலோசனை நடத்தி வருகிறது.
சிஎஸ்கே அணி மெகா ஏலத்தின் போது அஸ்வின், தீபக் ஹூடா, ராகுல் திரிப்பாட்டி உள்ளிட்ட சீனியர் வீரர்களில் முதலீடு செய்தது. ஆனால் எந்த வீரரும் சிறப்பாக விளையாடவில்லை. இதனால் அவர்களுக்கு பதிலாக வேறு வீரர்களை எடுக்க சிஎஸ்கே முயற்சி செய்து வருகிறது.
அதன்படி குஜராத் அணிக்காக விளையாடி வரும் வாஷிங்டன் சுந்தரை டிரேட் முறையில் வாங்க சிஎஸ்கே அணி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது. சிஎஸ்கே அணிக்காக ஆடி வந்த அஸ்வின் ஓய்வை அறிவித்துள்ள நிலையில், அவரின் இடத்தை வாஷிங்டன் சுந்தர் மூலமாக நிரப்ப முயற்சிகள் நடந்தது.
இந்நிலையில், வாஷிங்டன் சுந்தரை சிஎஸ்கேவுடன் வர்த்தகம் செய்யும் யோசனையை குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளர் ஆஷிஷ் நெக்ரா ஏற்க மறுத்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த முடிவை சிஎஸ்கே அணி நிர்வாகத்திடம் குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்வாகம் ஏற்கனவே தெரிவித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.